Monday, November 20, 2023

 ராஜபக்ஷக்களின் சிவில் உரிமை பறிக்கப்படுமா?





1977இல் பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த JR. ஜெயவர்தன  முன்னைய ஆட்சியின்போது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி சிரிமாவோ பண்டாரநாயக்க, பீலிக்ஸ் டயஸ், AHM. பவுஸி உள்ளிட்ட பலரது சிவில் உரிமைகளைப் பறித்து அவர்களை செல்லாக் காசாக்கியதை யாரும் இலகுவில் மறந்திருக்க முடியாது. 


ஆனால் ஜேஆரினது அளவிட முடியாத அதிகார துஷ்பிரயோகம், அரச பயங்கரவாதம் என்பன பற்றி யாரும்  பேசவே அஞ்சும் அளவுக்கு அவரது அதிகார பலம் பன்மடங்கு மேலோங்கி இருந்தது என்பது வேறு கதை.


இன்று அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் நாட்டின் இன்றைய பொருளாதாரம் அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளமைக்கான மூல காரணம் ராஜபக்ஷ சகோதர்களினதும் அவர்களது சகாக்களினதும் நிர்வாக சீர்கேடுகளே என இலங்கையின் அதிஉயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. அதேநேரம் அவர்கள் தொடர்பான சட்டவிரோத சொத்துக் குவிப்பு, ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் என்பன பற்றிய குற்றச்சாட்டுகளும்  வழக்குகளும் வாதப்பிரதிவாதங்களும் இன்றுவரை அனைவரதும் பேசுபொருளாக உள்ளமை நாடறிந்த உண்மையாகும்.


கேள்வி என்வென்றால்,  அவர்களது தயவில் பதவியில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க மாமனாரின் வழியைப் பின்பற்றி சிரிமாவோ அம்மையாருக்கும் அவரது சகாக்களுக்கும் வழங்கிய அதே தண்டனையை வழங்குவாரா அல்லது தொடர்ந்தும் அவர்களது ஆபத்பாந்தவனாக அவர்களது குற்றச் செயல்களை மறைத்து அவர்களைப் பாதுகாக்க முற்படுவாரா என்பதே! அதேநேரம் ரணில் தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு ஆயுதமாகவே இந்த நீதிமன்றத் தீர்ப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.


ஒரு நாடு குறிப்பாக பல்லின சனத்தொகையுள்ள ஒரு நாடு சட்டத்தின் ஆட்சியிலேயே ஆளப்படவேண்டுமே  தவிர தனிமனிதனால் அல்ல என்பதைக் கடந்தகால ஆட்சியாளர்கள் மூலம் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே மக்கள் எதிர்பார்ப்பது, குறைந்தபட்சம்  ராஜபகஷக்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான சொத்துக்களையாவது  மீட்டு அதன் மூலம் நலிவடைந்துள்ள தமது வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்! ஆனால் ரணிலிடமிருந்து இவற்றை எதிர்பார்க்க முடியாது என்பதையே அவரது தற்போதைய நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.


எவ்வாறாயினும் அடுத்த தேர்தலை மனதிற்கொண்டாவது இந்த நீதிமன்றத் தீர்ப்பினைப் பயன்படுத்தி ராஜபக்ஷக்களின் அடாவடித்தனங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவாரா அல்லது வழமைபோல இந்த முறையும் தோல்வியைத் தேடிக்கொள்வாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!