பாராளுமன்றத் தேர்தல் களம் எவ்வாறு அமையப்போகிறது?
பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் திடீர் எழுச்சி காரணமாக ஒருவித காழ்ப்புணர்ச்சிகொண்டு அதனைத் தமது பொது எதிரியாகக் கருதி தமது கொள்கை கோட்பாடுகளையெல்லாம் புறந்தள்ளி அதனைத் தோற்கடிப்பதில் மட்டும் குறியாக செயல்பட்டு வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக தே.ம.சக்தியை நோக்கி நகரும் முஸ்லிம் வாக்குகளைத் திசை திருப்புவதில் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பலர் சமூகத்தின் இழப்பில் தங்கள் சொந்த அதிர்ஷ்டத்தைப் பாதுகாத்து மேம்படுத்திக் கொள்வதற்காக பேய் பிசாசுகளுடன் கூட பேரம் பேசித் தமது காரியங்களைச் சாதித்துக்கொள்வதில் வல்லவர்கள் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காண்பித்துள்ளனர் என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளனர். பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இவ்வாறன சந்தர்ப்பவாதிகளை அரசியல் அரங்கிலிருந்து மக்கள் முற்றாக அகற்றிவிடுவர் என்பதை உணர்ந்த பழைய ஒழுங்கின் எச்ச சொச்சங்கள் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அடைவதைத் தடுக்க தமக்குத் தெரிந்த ஒவ்வொரு தந்திரத்தையும் கையாள முயற்சிக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலின்போது முஸ்லிம்களுக்கு மத்தியில் NPP முன்வைத்துள்ள புதிய முறைமையின் கீழ் முஸ்லிம்கள் தமது இரு பெருநாட்களில் ஒன்றை மாத்திரமே கொண்டாட அனுமதிக்கப்படுவார்கள், அவர்களது தினசரி வணக்க வழிபாடுகளின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும், ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றெல்லாம் கட்விழ்த்துவிடப்பட்ட கொடூரமான பொய்ப் பிரச்சாரங்களால் அவர்களைத் தம்பால் ஈர்க்க முடியாது என உணர்ந்த அவர்கள் புதிய கதைகளைப் புனைந்து புதிய ஜனாதிபதியை தர்மசங்கடத்திற்குள்ளாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் எனவும் முறைமை மாற்றத்திற்கான தாகம் தணிந்துவிடும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் ஆதரவு அதன் வெற்றிக்கான நம்பிக்கை ஒளி மேலோங்கி வருவதையே காட்டுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொஹட்டுவ மற்றும் சஜித் அணியினர் வெற்றி பெற்ற பல இடங்களைப் பறித்து அவர்களை மக்கள் தோற்கடித்து குறைந்த எண்ணிக்கைக்குள் அவர்களை வீழ்ச்சியடைய செய்திருக்கிறார்கள் என்பதும், கணிசமான மக்கள் அவர்களின் கொள்கைகளை நிராகரித்துள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிந்தாலும் அந்தத் தேர்தல் முடிவுகளின் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. அதாவது இன்னமும் கணிசமான மக்கள் தொகையினர் அவர்கள் பிடியில் உள்ளனர் என்பதும், அவர்கள் மீது அவர்களுக்கு பற்றும் பாசமும் வைத்துள்ளர் என்பதும் இந்த தேர்தலில் வெளிப்பட்டுள்ளது.
எனவே கடந்த அரசாங்கங்களின் மோசமான நிகழ்ச்சி நிரலின் தீய விளைவுகளை நன்குணர்ந்து, அந்த கட்சியை நிராகரித்த மக்கள் இனிவரும் காலங்களிலும் அந்த அரசின் மீதான தங்களது எதிர்ப்புக் குரலை வலுப்படுத்தியே ஆகவேண்டும். இந்தக் குரலின் வலிமையும், விரிவடையும் மக்கள் எதிர்ப்பு இயக்கமும்தான், அவர்களது மாயையில் மயங்கியிருக்கும் மக்களையும் அதிலிருந்து விடுவிக்கும் சூழலை உருவாக்கும். அதாவது மக்களின் எழுச்சி அவர்களுக்கு எதிராக களத்திலும், கருத்தியல் அடிப்படையிலும் வலுப்பட வேண்டும். வன்முறை, படுகொலை, வெறுப்பு பிரச்சாரம் அரசு அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், வலுவான மக்கள் இயக்கம் மாற்றுப் பாதையில் எழுச்சியுடன் முன்னேற வேண்டும். இதில் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். அதாவது வெறுமனே பார்வையாளர்களாக இருப்பதற்குப் பதிலாக பங்கேற்பாளர்களாக அவர்கள் மாற வேண்டும். அதுவே அனைத்து மக்கள் மனங்களிலிருந்து அவர்களை முற்றாக அப்புறப்படுத்துவதற்கான சரியான தீர்வாக அமையும். இதற்கு மக்களுக்கான மாற்று நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மக்கள் அணி திரள வேண்டும்.
சமூக சீர்திருத்த, சமூக நீதி சார்ந்த கொள்கைகளையும் உள்ளடக்கி, பொருளாதார சமத்துவம் நோக்கிய புதிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும். அந்தப் புதிய பாதை வேறு தெரிவு இல்லாத நிலையில் தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்து அதனை நோக்கி மக்கள் நகர்ந்ததில் வியப்பில்லை. தற்போதைக்கு அவர்களது நிகழ்ச்சி நிரல்தான் பெருவாரியான உழைக்கும் மக்களை உளப்பூர்வமாக வென்றெடுக்கும் அச்சாணியாகத் திகழும். இந்த மாற்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் அணிதிரட்டப்பட்டால், நமது தாய்நாட்டை பிற்போக்குவாதிகளின் பிடியிலிருந்து அகற்றி, மக்கள் சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் சூழலை ஏற்படுத்த முடியும்.
பொருளாதார சமத்துவத்தையும் அதன் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் மறுசீரமைக்கும் திட்டம் மற்றும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தூய்மைப்படுத்தும் அவர்களது செயற்திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதியான ஆதரவு தேவை. பாராளுமன்றத்திற்கான இப்போரில் வசதியான வெற்றிபெறத் தவறினால் அவை அனைத்தும் விழலுக்கிறைத் நீராகவே முடியும். முடிவைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.








