Friday, November 8, 2024

 தற்போதைய தேவை பிரதிநிதித்துவ அ0திகரிப்பா  அல்லது தகுதியும் திறமையுமா?

பெருமளவிலான முஸ்லிம் வாக்குகள் தேசிய மக்கள் சக்தியை நோக்கி நகர்வதால் பாராளுமன்றத்தில்  முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்துவிடும் எனச் சிலர் அங்கலாய்ப்பதைக் காணமுடிகிறது. 


முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் சேவைகளைப் பெற்றெடுக்கவும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பயன்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக அலாதியான அறிவுத்திறன் மற்றும் ஆழமான பார்வையும் கொண்ட தனிமனித ஆளுமைகளின் சிந்தனையும் செயல்பாடுகளுமே அவற்றை சாத்தியமாக்கியுள்ளது. 

உதாரணமாக, ஒரு காலத்தில் முஸ்லிம்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் தனியொருவராக நின்று இலங்கை வரலாற்றில் இதுவரை யாருமே செய்திராத அளவு பல சேவைகளைப் புரிந்த கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதை யாரும் இலகுவில் மறந்திருக்க முடியாது. நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்ப தமது நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவரது தன்னிகரற்ற திறன் தனது கருத்துகளை கட்சியின் கருத்துகளுக்கு முரண்படாத வகையில் மக்களிடம் கொண்டு செல்வதில் அவருக்கிருந்த இயல்பான திறமை என்பன அவரை ஒரு தலைசிறந்த தலைவராக்கியிருந்தது. 


அதேபோல கலாநிதி டீ.பி. ஜாயா, சேர் ராஸிக் பரீத் போன்றோரும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தமது பணிகளை சிறப்பாக செய்து வரலாற்றில் தடம் பதித்தனர். நமது கலாசாரம், அரசியல் மற்றும் வரலாறு ஆகியவற்றிற்கு அவர்கள் ஆற்றிய வளம் மிக்க பன்முகத் தன்மைகொண்ட பங்கு ஈடு இணையற்றது.

 சுருக்கமாக சொன்னால் அவர்கள் அனைவரும் ஒரே ஒரு முட்டையை இட்டு கொக்கரித்து ஊரைக் கூட்டும் கோழியைப்போலல்லாமல் ஆயிரம் முட்டைகளை இட்டு அமைதி காக்கும் ஆமையைப்போல எவ்வித ஆரவாரமுமின்றி சமூகத்திற்கும் நாட்டிற்கும் தம்மாலான பணிகளை செவ்வனே நிறைவேற்றி மனநிறைவு கொண்டனர். 


ஆனால் கடந்த காலங்களில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அதிகரித்திருந்தாலும் அவர்களுள் பெரும்பாலானோர் அநீதிக்கும் அராஜகத்திற்கும் துணைபோனவர்களாகவே மக்கள் அறிந்திருந்தனர். இன்னும் சிலர் ஊழல்களிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டு சமூகத்திற்கு தீராத அவமானத்தைத் தேடித் தந்தனர். சுருக்கமாக சொல்வதென்றால் அவர்கள் தமது பதவிக்குரிய மகத்துவத்தை மறந்து பாராளுமன்றத்திற்கு உள்ளே கை தூக்குபவர்களாகவும் பாராளுமன்றத்திற்கு வெளியே கை நீட்டுபவர்களாகவும் காலத்தை ஓட்டியதையே நாம் கண்டோம். இப்போது மீண்டும்  புதிய முகமூடிகளுடன் புதிய கூட்டணியில் மக்கள் முன் எழுந்தருளியுள்ளனர். 


எனவே இவர்கள் மூலமாக ஏற்படும் பிரதிநிதித்துவ அதிகரிப்பு தேவைதானா என்பதை முஸ்லிம் வாக்காளரே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் மக்கள் இப்போதெல்லாம் ஒரு கட்சிக்கோ தலைவருக்கோ கட்டுப்பட்டு  கண்மூடித்தனமாக வாக்களிப்தை விட்டு சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்!

J



No comments:

Post a Comment