Friday, November 8, 2024

 தற்போதைய தேவை பிரதிநிதித்துவ அ0திகரிப்பா  அல்லது தகுதியும் திறமையுமா?

பெருமளவிலான முஸ்லிம் வாக்குகள் தேசிய மக்கள் சக்தியை நோக்கி நகர்வதால் பாராளுமன்றத்தில்  முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்துவிடும் எனச் சிலர் அங்கலாய்ப்பதைக் காணமுடிகிறது. 


முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் சேவைகளைப் பெற்றெடுக்கவும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பயன்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக அலாதியான அறிவுத்திறன் மற்றும் ஆழமான பார்வையும் கொண்ட தனிமனித ஆளுமைகளின் சிந்தனையும் செயல்பாடுகளுமே அவற்றை சாத்தியமாக்கியுள்ளது. 

உதாரணமாக, ஒரு காலத்தில் முஸ்லிம்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் தனியொருவராக நின்று இலங்கை வரலாற்றில் இதுவரை யாருமே செய்திராத அளவு பல சேவைகளைப் புரிந்த கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதை யாரும் இலகுவில் மறந்திருக்க முடியாது. நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்ப தமது நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவரது தன்னிகரற்ற திறன் தனது கருத்துகளை கட்சியின் கருத்துகளுக்கு முரண்படாத வகையில் மக்களிடம் கொண்டு செல்வதில் அவருக்கிருந்த இயல்பான திறமை என்பன அவரை ஒரு தலைசிறந்த தலைவராக்கியிருந்தது. 


அதேபோல கலாநிதி டீ.பி. ஜாயா, சேர் ராஸிக் பரீத் போன்றோரும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தமது பணிகளை சிறப்பாக செய்து வரலாற்றில் தடம் பதித்தனர். நமது கலாசாரம், அரசியல் மற்றும் வரலாறு ஆகியவற்றிற்கு அவர்கள் ஆற்றிய வளம் மிக்க பன்முகத் தன்மைகொண்ட பங்கு ஈடு இணையற்றது.

 சுருக்கமாக சொன்னால் அவர்கள் அனைவரும் ஒரே ஒரு முட்டையை இட்டு கொக்கரித்து ஊரைக் கூட்டும் கோழியைப்போலல்லாமல் ஆயிரம் முட்டைகளை இட்டு அமைதி காக்கும் ஆமையைப்போல எவ்வித ஆரவாரமுமின்றி சமூகத்திற்கும் நாட்டிற்கும் தம்மாலான பணிகளை செவ்வனே நிறைவேற்றி மனநிறைவு கொண்டனர். 


ஆனால் கடந்த காலங்களில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அதிகரித்திருந்தாலும் அவர்களுள் பெரும்பாலானோர் அநீதிக்கும் அராஜகத்திற்கும் துணைபோனவர்களாகவே மக்கள் அறிந்திருந்தனர். இன்னும் சிலர் ஊழல்களிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டு சமூகத்திற்கு தீராத அவமானத்தைத் தேடித் தந்தனர். சுருக்கமாக சொல்வதென்றால் அவர்கள் தமது பதவிக்குரிய மகத்துவத்தை மறந்து பாராளுமன்றத்திற்கு உள்ளே கை தூக்குபவர்களாகவும் பாராளுமன்றத்திற்கு வெளியே கை நீட்டுபவர்களாகவும் காலத்தை ஓட்டியதையே நாம் கண்டோம். இப்போது மீண்டும்  புதிய முகமூடிகளுடன் புதிய கூட்டணியில் மக்கள் முன் எழுந்தருளியுள்ளனர். 


எனவே இவர்கள் மூலமாக ஏற்படும் பிரதிநிதித்துவ அதிகரிப்பு தேவைதானா என்பதை முஸ்லிம் வாக்காளரே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் மக்கள் இப்போதெல்லாம் ஒரு கட்சிக்கோ தலைவருக்கோ கட்டுப்பட்டு  கண்மூடித்தனமாக வாக்களிப்தை விட்டு சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்!

J



Sunday, September 15, 2024


ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியும் மாற்றுக் கட்சிகளும்

 


பெரும்பான்மை சிங்கள வாக்குகளால் மட்டுமன்றி சிறுபான்மையினரான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும்   வாக்குகளினாலும் தமது வெற்றி நிர்ணயிக்கப்படுமானல் அந்த வெற்றி  முழுமை பெறும் என்ற அநுர குமார திஸாநாயக்க அவர்களின்  அண்மைக்கால அரைகூவல்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினரின் மனங்களில் ஒரு உத்வேகத்தை ஏறபடுத்தியுள்ளது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கடந்த கால கசப்பான அனுபவங்களால் விரக்தியடைந்துள்ள சிறுபான்மையினர் குறிப்பாக  முஸ்லிம் வாக்காளர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அணிதிரண்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இதனால் மிரண்டுபோயுள்ள மாற்றுக் கட்சியினர் தாம் இதுவரை அனுபவித்து வந்த சுகபோகங்களையும் அதிகார பலத்தையும் இழந்து வெற்று மனிதர்களாக வாழவேண்டிவரும் என்ற ஆதங்கத்தினாலும் தாம் இதுவரை கொள்ளையடித்த சொத்துகளுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அச்சத்தினாலும் அவர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பியும் விஷமப் பிரசாரங்களை மேற்கொண்டும் மக்களிடையே  விஷக் கருத்துகளை விதைத்து ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தி அதனைத் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முனைந்துள்ளனர்.


 ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்திற்கு எதிராக நிறுத்துவது, இன மோதல்களைத் தோற்றுவித்து வெறுப்புணர்வைத் தூண்டுவது,  ஆகியவற்றில் இந்தப் பிற்போக்கு வலதுசாரிக் கட்சிகள் கில்லாடிகள் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. இருந்தாலும், இந்தப் பூச்சாண்டிக் கதைகளையெல்லாம் நம்பியகாலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் அவர்களுக்கு உணர்த்தி வருவதையே நாம் காண்கிறோம்.


எனவே கொஞ்சம் கண் அசந்தாலும் கடந்த காலங்களில் நாட்டின் வளங்களை சூறையாடி உண்டு கொழுத்த பெருச்சாலிகள்  தமக்கு முடியுமான வழிகளில் தனது நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்து முன்னெடுக்கவே முயற்சிக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக, மக்கள் தீர்ப்பைப் புறந்தள்ளி மதநல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பலவீனப்படுத்த முயற்சிப்பதோடு, இந்நாட்டு,  பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் நலன் காக்கும் பாதையிலேதான் அவை தொடர்ந்தும் பயணிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  பல்வேறு சமூகங்களுக்கு இடையில் உள்ள சமச்சீரற்ற உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அறிவுசார்ந்த தீர்வுகளை முன்வைத்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலமே பிரித்தாளும் இந்த பிற்போக்குவாதிகளின் தந்திரத்தை நம்மால் முறியடிக்க இயலும் என்பதையும் உண்மைப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தவிர்ப்பதால் அது சாத்தியமில்லை என்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.


எனவே நமது போராட்டக்களம் இதனுடன் சுருங்கி நின்று விட முடியாது. எனவே இவர்களது ஊழல் மலிந்த  மக்கள் விரோத கொள்கைகளைத் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய பெரும் பணி தேசிய மக்கள் சக்தியின் முன் உள்ளது.   எனவே வர்க்க வெகுஜன போராட்டங்களை விரிவுபடுத்தி, அவற்றின் அரசியல் புரிதலை வலுப்படுத்தி,  ஜனநாயக சக்திகளை முன்னேற்றுவது தேசிய மக்கள் சக்தியின் முன் உள்ள மாபெரும் அரசியல் கடமையாகும். 

தவறினால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்திலேறிய கதைதான்!

.

Sunday, September 1, 2024


 

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம்


அநுரகுமார திஸாநாயக்கவினதும் அவரது தேசிய மக்கள் சக்தியினதும் அண்மைக் காலத் திடீர் எழுச்சியால் கலவரமடைந்த மாற்றுக் கட்சியினர் பலர் அவர்களது கடந்த காலக் குப்பைகளைக் கிளரி இரை மீட்கத் தொடங்கியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் ஜே.ஆர் ஜயவர்தன 1977இல் ஆரம்பித்து வைத்த 'பீஷன யுகய' எனப்படும் சாபத்திற்குரிய 17 வருடகால அராஜக ஆட்சி, அதனைத் தொடர்ந்து ராஜபக்ஷக்களின் ஊழல் மலிந்த இனவாத ஆட்சி மற்றும் திருடர்களைப் பிடிக்க வந்த நல்லாட்சி நாயகர்களின் மாபெரும் வங்கிக் கொள்ளை, ஈஸ்டர் படுகொலை, அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டமை போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் அது ஒன்றும் அந்த அளவு மோசமானதொன்றல்ல என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

  

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த ஜனாதிபதித் தேர்தல் பலவகையில் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் முதன்முறையாக தமது பாரம்பரிய வலதுசாரி யு.என்.பி மனப்பாங்கிலிருந்து விடுபட்டு குறிப்பாக இளைஞர் அணியொன்று  வேறொரு தெரிவு இல்லாத நிலையில், மாற்றத்தை வேண்டி மூன்றாவது அணியான தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்து பரந்த அளவில் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டும் கூட்டங்களை ஏற்பாடு செய்தும் ஆதரவளித்து வருகின்றமையைக் காணமுடிகிறது. இது 'எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதீர்கள்'  என்ற கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களது அறிவுரையை நினைவூட்டுகிறது. 

அண்மைக் காலங்களில் இனமுரண்பாட்டுக் கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. அவர்கள் அனுபவித்த இன்னல்கள், இழந்த சொத்துக்கள், தம்மால் தெரிவு செய்யப்பட்ட  அரசியல்வாதிகளால் அவர்கள் அடைந்த அவமானங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் மற்றும் ஏமாற்றங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட விரக்தி நிலையே இந்த முடிவுக்கு அவர்களை உந்தித் தள்ளியுள்ளது என ஊகிக்கலாம். ஊடகவியலாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும் இதற்கு பல விளக்கங்களை அளிக்கலாம். மக்கள் இயக்கங்களும் தனிப்பட்டவர்களும்கூட ஆரூடங்களில் இறங்கி விவாதிக்கலாம் ஆனால் அவர்களது முடிவு சரியானதா தவறானதா என்ற விவாதம் இங்கு அவசியமற்றது, இது அவர்கள் சுயமாக சிந்தித்து நாட்டினதும் சமூகத்தினதும் நலன் கருதி எடுத்த நல்ல முடிவு என்றே தோன்றுகிறது. முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தப்பாரிய மனமாற்றத்தைப் பார்க்கும்போது  அவர்களது வாக்குகள் ஒரு வேளை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வாக்காகவும் அமையலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ஜே.வீ.பீ.யின் மறக்க முடியாத  கடந்த கால கசப்பான  வரலாற்றை யாரும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும், தமது எல்லாவகையான திருட்டுத் தனங்களையும் கொடூரமான இன வன்முறைகளையும் படுகொலைகளையும் முடிமறைத்து  மீண்டும் புதிய முகமூடிகளுடன் வாக்குப் பிச்சை கேட்டு மக்கள் முன் வந்திருக்கும் பாதாளக் கோஷ்டியினரின் அணுசரனையுடன் ஆட்சி புரிந்த பழைய கேடிகளுடன்  ஒப்பிடுகையில் நடுநிலையில் சுயமாக சிந்திக்கும் ஒருவர் வேறு வழியின்றி Best among the worst என்ற அடிப்படையில் அவர்களைத் தெரிவு செய்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப்போக்கு இதுவரை நிலவிவந்த முறைமையை மக்கள் வீழ்ச்சியடைய செய்திருக்கிறார்கள் என்பதையும் கணிசமான மக்கள் அந்தக் கொள்கைகளை நிராகரித்துள்ளனர் என்பதையுமே தெளிவாக்குகிறது.


தேசிய மக்கள் சக்தியைத் தவிர இத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் ஒரே கருவறையில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள் என்பதை அனைவரும் அறிவர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்தொட்டு அவர்களது கட்சித் தாவல்கள் அதனையே எடுத்துக் காட்டுகின்றது. எனவே  அவர்களது நிகழ்ச்சி நிரல் என்பது  ராஜபக்ஷ குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலான அதே ஊழல்கள் நிறைந்த இனவாத இலக்குதான் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் ஆட்சி அதிகாரம் மீண்டும் அவர்கள் கையில் சிக்குமானால், மதசுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, ஜனநாயகம் உள்ளிட்ட நமது நாடு எதிர்காலத்தில் கட்டியெலுப்ப வேண்டிய சிறந்த கோட்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் மேலும் முனைப்புடன் செயல்படுவர் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதேபோன்று அடித்தட்டு வர்க்கங்களின் நலன்களைக் காவு கொடுத்து, மேலும் மேலும் முதலாளித்துவ வர்க்கங்களின் நலனுக்கான பொருளாதாரத்தை முன்னெடுக்க, முன்பைவிட முனைப்பாக முயற்சிப்பர். எனவே அதனைத் தடுக்கும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை வலுப்படுத்துவதும், மக்கள் இயக்கங்களை தீவிரப்படுத்துவதும்,  மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து, போராட்டங்களை முன்னெடுப்பதும் இன்றைய அவசர கடமைகளாக உள்ளன. எதிர்ப்புணர்வு என்பதுடன் மக்களின் அரசியல் புரிதல் நின்றுவிடக் கூடாது. முன்னைய அரசாங்கங்களினால் பின்பற்றப்பட்டு வந்த பிற்போக்கு சித்தாந்தங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும். இந்தத் தேர்தலோடு இந்தக் கொள்கைக்கு எதிரான போராட்டம் முடிவடைந்து விடப்போவதில்லை. வலதுசாரி பிற்போக்கு கருத்தியலுக்கு எதிரான போராட்டம் தொடரவே செய்யும்.

முஹம்மத் றஸீன்

Wednesday, July 31, 2024

 பழையன கழிதலும் புதியன புகுதலும்

- முஹம்மத் றஸீன்

இலங்கையில் இப்போதெல்லாம் தேர்தல் ஜூரம் கொவிட்டைவிட வேகமாகப்பரவிவருவதைக் காண முடிகிறது. தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்று கணிப்பீடு செய்வதில் வாக்காளர்களைவிட அரசியல்வாதிகளே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்சி கொள்கைகள் எல்லாவற்றையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு எந்தப்பக்கம் தாவினால் தாம் எதிர்பார்த்திருக்கும் பதவியைப் பெறலாம் என்பதில் அரசியல்வாதிகள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இதற்கிடையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட பின்பும் தனது பதவியை நீட்டிக்கவும் தேர்தலைத் தள்ளிப் போடவும பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருவதையும் காண முடிகிறது. ஒருபுறம் பொய்களும் புரட்டுகளும் வதந்திகளும் கபடநாடகங்களும் அரங்கேறிக்கொண்டிருக்க மறுபுறம் அரசியல் ஆரூடங்களும் வீராப்புப் பேச்சுகளும் விஷமப் பிரசாரங்களும் பெரும் பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணிகளிலும் அவர்களது பிரசாரக் கூட்டங்களிலும் ஒருபோதுமில்லாத வகையில் இன, மத, மொழி கடந்த மாபெரும் மக்கள் பங்கேற்பினைக் கண்டு கதி கலங்கிப் போயுள்ள ஏனைய கட்சிகள் தேசிய மக்கள் சக்தியைத் தமது பொது எதிரியாகக் கருதி நிலையான கூட்டணிகளை உருவாக்கி அதன் முன்னேற்றத்தைத் தடுக்கும் உத்திகளை ஆராய்கின்றன.   

அரசியலில் தனிக்காட்டு ராஜாவாக இதுவரை கோலோச்சிவந்த முக்கிய புள்ளிகள்  தமது எதிர்காலம் என்னாகுமோ என்ற அச்சத்தில் எந்தப்பக்கம் தாவினால் தப்பலாம் எனப் புலிகளைப்போலப் பதுங்கிப் பார்த்திருக்கின்றனர். இன்னும் சிலர் அசட்டுத் துணிச்சலுடன் வருவது வரட்டும் என வாய்ச்சவடால் விட்டும் வாய்கிழியக் கர்ஜித்துக்கொண்டும் திரிகின்றனர். எவ்வாறாயினும் இதுவரை அடங்காப்பிடாரியாக அதிகாரத்தைப் பற்றிப் பிடித்து நாட்டைச் சீரழித்து இழிநிலைக்குத் தள்ளிய ஒருசிலர் அரசியல் அஞ்ஞாத வாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பது மட்டும் உறுதி. அவர்களுள் ஒருசிலர் தேர்தலுக்கு முன்பே தலை தப்பினால் போதும் என நாட்டைவிட்டுத் தப்பியோடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சுதந்திரத்தின் பின்னரான நமது நாட்டுப் பொருளாதாரம் தாராளமயப் பாதையில் ஆரம்பித்து இடையில் சிலகாலம் சோஸலிஸப் பாதையில் பயணித்து 1977க்குப்பின் அதிதீவிர தாராளமய காப்ரேட் ஆதரவுக் கொள்கைகள் அடங்கிய ஒரு திறந்த பொருளாதாரத்துக்குள் பிரவேசித்தது. தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய இப்பாதை இலங்கை வரலாற்றில் இதுவரை யாருமே கண்டிராத அடக்குமுறைகளும் அராஜகங்களும் அட்டூழியங்களும் இனவன்முறைகளும் தலைவிரித்தாடி  இந்நாட்டு அரசியல் வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது. இவ்வாறு  1977 முதல் ஜே.ஆர். ஜெயவர்தன பின்பற்றிய மெக்கியாவலி சித்தாந்தங்கள் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் நாட்டின் தொழிலாளர் வர்க்கமும் சிறு தொழில் முனைவோரும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதோடு பின்னாட்களில் பாதாள உலகக் கோஷ்டியினரும் ஊழல் பேர்வழிகளும் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கவும் அவர்களது ஆதிக்கம் மேலோங்கவும் வழி வகுத்தது. எனவே மாமனார் ஜே.ஆர். முதல்  மருமகன் ரணில் வரையிலான ஆட்சி காலத்தில் அராஜகமும் இன வன்முறைகளும் வளர்ந்த அளவுக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, வறுமை ஒழிப்பு, மக்கள் வாழ்க்கைத்தர மேம்பாடு ஆகிய முக்கிய அம்சங்களில் வளர்ச்சி ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே எதிர்வரும் தேர்தலில் பழைய முகங்களை நிராகரித்து நாம் அனைவரும் விரும்பும் மாற்றமொன்று நிகழ்ந்து இன்றைய அரசியல் நாடகத்தில் ஒரு புது முகம் அறிமுகமானாலும் இதுவரை புரையோடிப்போயுள்ள மேசமான மதவெறி அரசியல் விளைவுகளை முற்றாகத் துடைத்தெறியப் போராடவேண்டியிருக்கும் அதேசமயம் அரசின் அதிதீவிர தாராளமய காப்ரேட் ஆதரவுக் கொள்கையை நிராகரித்து உழைக்கும் வர்க்கத்திற்கும் நாட்டு வளர்ச்சிக்கும் அத்தியவசிய மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பெரும் சவாலையும் அவர் எதிர்கொள்ள நேரிடும். அதேநேரம் அவர்களைக்கொண்டு அவற்றைச் செய்விக்கும் திறன் கட்சிகளாலும் கொள்கைகளாலும் பிளவுபட்டிருக்கும் நமக்கு, குறிப்பாக நமது இளைஞர் சமுதாயத்திற்கு இருக்குமா? அதற்கு நமது அரசியல் யாப்பு இடம் தருமா? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும் விரக்தியின் விளிம்பில் வாக்களிக்கச் செல்லும் பெரும்பாலானவர்கள் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து, வருவதை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டதாகவே தோன்றுகிறது.   



 


Monday, November 20, 2023

 ராஜபக்ஷக்களின் சிவில் உரிமை பறிக்கப்படுமா?





1977இல் பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த JR. ஜெயவர்தன  முன்னைய ஆட்சியின்போது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி சிரிமாவோ பண்டாரநாயக்க, பீலிக்ஸ் டயஸ், AHM. பவுஸி உள்ளிட்ட பலரது சிவில் உரிமைகளைப் பறித்து அவர்களை செல்லாக் காசாக்கியதை யாரும் இலகுவில் மறந்திருக்க முடியாது. 


ஆனால் ஜேஆரினது அளவிட முடியாத அதிகார துஷ்பிரயோகம், அரச பயங்கரவாதம் என்பன பற்றி யாரும்  பேசவே அஞ்சும் அளவுக்கு அவரது அதிகார பலம் பன்மடங்கு மேலோங்கி இருந்தது என்பது வேறு கதை.


இன்று அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் நாட்டின் இன்றைய பொருளாதாரம் அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளமைக்கான மூல காரணம் ராஜபக்ஷ சகோதர்களினதும் அவர்களது சகாக்களினதும் நிர்வாக சீர்கேடுகளே என இலங்கையின் அதிஉயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. அதேநேரம் அவர்கள் தொடர்பான சட்டவிரோத சொத்துக் குவிப்பு, ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் என்பன பற்றிய குற்றச்சாட்டுகளும்  வழக்குகளும் வாதப்பிரதிவாதங்களும் இன்றுவரை அனைவரதும் பேசுபொருளாக உள்ளமை நாடறிந்த உண்மையாகும்.


கேள்வி என்வென்றால்,  அவர்களது தயவில் பதவியில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க மாமனாரின் வழியைப் பின்பற்றி சிரிமாவோ அம்மையாருக்கும் அவரது சகாக்களுக்கும் வழங்கிய அதே தண்டனையை வழங்குவாரா அல்லது தொடர்ந்தும் அவர்களது ஆபத்பாந்தவனாக அவர்களது குற்றச் செயல்களை மறைத்து அவர்களைப் பாதுகாக்க முற்படுவாரா என்பதே! அதேநேரம் ரணில் தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு ஆயுதமாகவே இந்த நீதிமன்றத் தீர்ப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.


ஒரு நாடு குறிப்பாக பல்லின சனத்தொகையுள்ள ஒரு நாடு சட்டத்தின் ஆட்சியிலேயே ஆளப்படவேண்டுமே  தவிர தனிமனிதனால் அல்ல என்பதைக் கடந்தகால ஆட்சியாளர்கள் மூலம் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே மக்கள் எதிர்பார்ப்பது, குறைந்தபட்சம்  ராஜபகஷக்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான சொத்துக்களையாவது  மீட்டு அதன் மூலம் நலிவடைந்துள்ள தமது வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்! ஆனால் ரணிலிடமிருந்து இவற்றை எதிர்பார்க்க முடியாது என்பதையே அவரது தற்போதைய நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.


எவ்வாறாயினும் அடுத்த தேர்தலை மனதிற்கொண்டாவது இந்த நீதிமன்றத் தீர்ப்பினைப் பயன்படுத்தி ராஜபக்ஷக்களின் அடாவடித்தனங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவாரா அல்லது வழமைபோல இந்த முறையும் தோல்வியைத் தேடிக்கொள்வாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

Tuesday, July 18, 2023


அநுர குமார அரசகட்டில் ஏறுவாரா?



இப்போதெல்லாம் அனேகமானோர் பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ள நம் நாட்டை மீட்டெடுத்து கட்டியெழுப்பக்கூடிய வலிமை ஜே.வீ.பி. தலைமையிலான தேசிய மக்கள்  சக்திக்குத்தான் உண்டு எனக் கருதுவதாகத் தெரிகிறது. இதேபோன்றுதான் கடந்த தேர்தலில் பலவிதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாத்து ஒரு ஸ்திரமான இலங்கையை உருவாக்குவதற்கு கோத்தாபயதான் சிறந்த தெரிவு என நம்பி வரலாறு காணாத வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்தனர். ஆனால் நடந்தது என்ன? ஒரு வருடம்கூட அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என தலை தெரிக்க ஓடிய கதையையும்  அதற்கு முன் நல்லாட்சி என்ற பெயரில் கள்வர்களைப் பிடிக்க வந்தவர்கள் கல்லாப் பெட்டியிலேயே கை வைத்த கதையையும் தற்போது நல்லாட்சியின் நாயகன் தண்டப்பணம் செலுத்துவதற்காகக்  கையில் பிச்சா பாத்திரத்தை ஏந்தியுள்ள பரிதாபக் காட்சிகளையும்தான் நாம் கண்டோம். 

இன்னொரு பக்கம் 'அறிந்தறிந்தும் யானை தன் பாகனையே கொல்லும்' என்பது போல மீண்டும் ஒரு கூட்டம் வீழ்ந்த நாட்டைத் தூக்கி நிறுத்தி பெரும் இக்கட்டிலிருந்து நாட்டைமீட்டெடுக்கும் ஆபத்பாந்தவனாக ரணிலைக் கொண்டாடத் தெடங்கியுள்ளனர். இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புடன் ஒருவரை ஆட்சியில் அமர்த்துவதும் பின்னர் ஏமாந்து பின்வாங்குவதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது.

இவ்வாறான ஒரு பின்னணியில்தான் ஜே.வீ.பி. அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் முற்போக்குவாதிகள் எனக் கூறப்படும் சக்திகளை ஒன்றுதிரட்டி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அடுத்த தேர்தலுக்கு முகம்கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் பல விடயங்களில், குறிப்பாக சிறுபான்மையினர் தொடர்பான விடயங்களில் அவர்களது போக்கும் கொள்கைகளும்  இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இலங்கையில் இதுவரை நடைபெற்ற, நடைபெறுகின்ற அல்லது நடைபெறப்போகும் அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கும் பின்னணியில் ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல் உண்டு என்பதை இங்குள்ளவர்கள் அடிக்கடி மறந்துவிடுகின்றனர் அல்லது அறியாதிருக்கின்றனர். நாம் அண்மைக்காலமாக அனுபவித்த அவலங்களே அதற்கான சான்றுகள். எனவே ஆளைமயக்கும் பேச்சுகளுக்கும் அதனை செவிமடுக்க அணி திரளும் மக்கள் கூட்டத்தினரையும் கண்டு கண்மூடித்தனமாக செயல்படாது மக்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஆட்சியைக் கைப்பற்றும் சக்தி அற்றவர்கள். அதனால் தமக்குரிய உரிமைகளைத் தெரிந்துகொள்வதற்கும் அவற்றை வென்றெடுப்பதற்கும் அயராது போராடவேண்டியுள்ளது. இன்று அவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி விரக்தியின் விளிம்பில் விழி பிதுங்கி நிற்கின்றனர். சிறுபான்மையினர் மனதில் வேறுன்றியுள்ள ஜே.வீ.பி தொடர்பான சந்தேகங்களைக் கலைந்தெறிவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு மக்கள் முன் வைக்கப்படவேண்டும். அதில் அவர்களது காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். அதேநேரம் ஜே.வீ.பியின் கரை படிந்த கடந்தகால வரலாறுகளை மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். அவர்களது எச்சசொச்சங்கள் விக்டர் ஐவன், வீரவன்ஸ போன்ற வடிவங்களில் இன்னும் உலாவித் திரிவதையும் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.  எனவே இன்றைய ஜே.வீ.பியினர் அவ்வாறானவர்கள் அல்லர் என வாதிடுவோர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி பாமர ஜனங்களின் நம்பிக்கையை வெல்ல முன்வரவேண்டும். 

எவ்வாறாயினும் இவர்கள் மூலம் மூன்றாவது அணியொன்று உருவாகி நாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுமானால் நாட்டின்மீது அபிமானம்கொண்ட அனைவரும் வரவேற்கவே செய்வர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். பதவியில் ருசி கண்ட பெருச்சாளிகளும் குள்ளநரிக் கூட்டங்களும் ஏன் வெளிநாட்டு மறை கரங்களும்கூட அதனை ஒருமுகமாகக் கிள்ளியெறியவே முற்படும். எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர் மனம்மாறி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்து அவர்களை அரசகட்டில் ஏற்றுவார்களா? அல்லது தெரியாத தேவதையைவிட தெரிந்த பேய்களே பரவாயில்லை எனக் கைகளை விரித்து இன்னொரு பொல்பொட் ஆட்சிக்கு வழி விடுவார்களா?  என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகாண அடுத்த தேர்தல்வரை பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். 



Wednesday, August 26, 2020

 

கோத்தாவின் அலி சப்ரி, சிரிமாவோவின் பதியுத்தீன் மஹ்மூதுக்கு நிகராவாரா?

 -அமீர் அலி

 

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை விரும்பிய சிங்கள-பௌத்த டும்போக்கு தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில், 26 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் ஒரே முஸ்லிம் அமைச்சராக அலி சப்ரி  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால்  நியமிக்கப்பட்டமை,  அரசாங்கத்தில் அவரது எதிர்கால வகிபாகம், சமூகத்திற்கான அவரது சேவை மற்றும் நாட்டிற்கான பங்களிப்பு பற்றிய  பல சர்ச்சைகளைத் தூண்டிவிட்டுள்ளன.

 ஏற்கெனவே, சிலர் அலி ஸப்ரி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டதையும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா  லக்ஷ்மன் கதிர்காமரை  வெளியுறவு அமைச்சராக நியமனம் செய்ததையும்  ஒப்பீடு செய்து,  இவை இரண்டு நியமனங்களும் குறிப்பிட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் அமைச்சர்களின் சமூக நலன்களைப் பாதிக்கும் வகையிலான அரசாங்கத்தின் கடும்போக்கானதும்  சர்ச்சைக்குரியதுமான சில தீர்மானங்களை அமுல்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டவை அன்றி வேறில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். இரண்டு அமைச்சர்களின் அறிவு மற்றும் தொழில்சார் திறனைப் பொறுத்தவரை எந்தவொரு குறைபாட்டையும் காண முடியாது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான  லக்ஷ்மன் கதிர்காமரின் சிலுவைப் போர், அவரை தமிழ் தேசியவாதிகளின் பார்வையில் தமிழ் சமூகத்தின் எதிரியாகக் காட்டியது. இதேபோல், கோத்தாபய மற்றும் அவரது அமைச்சரவை பௌத்த மேலாதிக்கவாதிகளின் அழுத்தத்தின் கீழ் ஒரு நாடு-ஒரு-சட்டம் என்ற கொள்கையை அமல்படுத்துவதாயின்; சர்ச்சைக்குரிய முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் (MMDA) போன்ற முஸ்லிம் தனிப்பட்ட சட்டங்களை ஒழிப்பது மட்டுமன்றி  முஸ்லிம் மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம் பொதுப் பள்ளிக்கூடங்களின் இருப்புக்கான பகுத்தறிவுரீதியான மறுஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த தீவிர நடவடிக்கைகளில் சிலவற்றைச் செய்யக்கூடிய ஒருவராக அலி ஸப்ரி இருப்பாரா? இது போன்ற மாற்றங்களைச் செய்ய அவர் தனது சொந்த சமூகத்திடமிருந்து ஆதரவைப் பெறுவாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 அலி ஸப்ரி, கதிர்காமர் என்போருக்கு அப்பால் 1960-1963 மற்றும் 1970-77 காலப்பகுதியில் கல்வி அமைச்சராகவும் 1963-1965 வரை சுகாதார அமைச்சராகவும் சிரிமாவோ அம்மையாரால் நியமிக்கப்பட்ட பதியுத்தீன் மஹ்மூத் என்ற மற்றொரு அமைச்சரும் இருந்தார். ஒரு சில ஊடக நேர்காணல்கள் மற்றும் பொது உரைகள் மூலம் பதியுத்தீன் மஹ்மூத் மீது அலி ஸப்ரி மிகுந்த மரியாதை வைத்திருந்ததையும் அவரது தந்தையின் நல்ல நண்பராக இருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. எனவே, பதியுத்தீன் மஹ்மூத் என்ன செய்தார், எவ்வாறு தனது குறிக்கோளை அடைந்துகொண்டார் என்பதையும் அவர் செயல்பட்ட சூழ்நிலைகளையும் அவருக்கு நினைவூட்டுவது பொறுத்தமாக இருக்கும். எவ்வாறு கடும் போக்கு சிங்கள-பௌத்த தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்பின் மத்தியில் ஸப்ரி நியமிக்கப்பட்டாரோ அதைப் போலவே, பதியுத்தீன் மஹ்மூத் தனது அரசியல் வாழ்க்கையின் பிற்கால கட்டங்களில் அமைச்சவையிலும் வெளியிலும் இதேபோன்ற சூழலை எதிர்கொண்டார். மேலும், அலி ஸப்ரிக்கு பின்னால் கோத்தாபய உறுதியாக இருப்பது போல் சிரிமாவோ அம்மையார் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

இருப்பினும், 1970களை விட, 2020 மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதி அடிப்படையில் வேறுபட்டவையாக இருந்தன. சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இரு சமூகத்திலுமிருந்த தேசியவாத சக்திகள் சிரிமாவோ அம்மையாரின் ஆதரவைப் பெற்ற பதியுத்தீன் மஹ்மூதைத் தாக்க முஸ்லிம் பழமைவாத சக்திகளுடன் கைகோர்த்த போதிலும்  அன்றைய தேசியவாத சக்திகள் குறிப்பாக பௌத்த தீவிரவாத சக்திகள், அவர்களின் தற்போதைய அவதாரங்களைப்போல அத்துனை கொடூரமானதாகவும் வன்முறை சார்ந்ததாகவும் இருக்கவில்லை.  பௌத்த தேசியவாதத்தின் தன்மையின் இந்த ஆக்கிரமிப்புரீதியான உருமாற்றம்தான் அலி ஸப்ரியின் அமைச்சர் பதவிக்கு சவாலாக அமைவதோடு தனது சமூகத்திற்கான சேவை செய்யும் அவரது ஆற்றலையும் வெகுவாகப் பாதிக்கிறது.

 பதியுத்தீன் மஹ்மூதைப் பொறுத்தவரை, அவர் அடிப்படையில் ஒரு தேசாபிமானியாகவும்  தொலைநோக்குள்ளவராகவும் இருந்தார். விட்டுக்கொடுப்பில்லாத தேசாபிமானியாகவும், முற்போக்கான மற்றும் நவீனத்துவத்தின் தீவிர ஆதரவாளராகவும் தனது சொந்த அந்தஸ்தை விட்டுக் கொடுக்காது பல மட்டங்களில் தனது சொந்த சமூகத்திற்கு அவரால் செய்ய முடிந்தது. அவர் ஒரு அமைச்சராகவும் சமூகத் தலைவராகவும் ஆற்றிய பணிகளை ஒரு சில வார்த்தைகளால் அல்லது பத்திகளால் விவரித்துவிட முடியாது. ஆயினும்கூட, அவரது பன்னிரண்டு ஆண்டு அமைச்சராகப் பணியாற்றிய வரலாற்றிலிருந்து ஓரிரு மைல்கற்கள் அவர் விரும்பியதை எவ்வளவு தந்திரோபாயமாக அடைந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது. கல்வி அமைச்சராக, தனியார் பாடசாலைகளை தேசியமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை  அவர் தனியாக பொறுப்பேற்றதோடு சுகாதார அமைச்சராக அரச மருத்துவர்களால் மேற்கொள்ளப்பபட்ட தனியார் மருத்துவ சேவைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அச்சமின்றி செயல்படுத்தினார். இவை பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் மாற்றப்பட்டனவாயினும், இவற்றையும்  சர்ச்சைக்குரிய ஏனைய நடவடிக்கைகளையும் குறிப்பாக கல்வி தொடர்பான விடயங்களை செயல்படுத்துவதில், பதியுத்தீன் மஹ்மூத் தனது சொந்த சமூகத்தின் முழு ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. கொழும்பு ஸாஹிரா கல்லூரியைக் கையேற்பதற்கான நீதிமன்றப் போராட்டங்கள் அவரது சமூகத்தின் எதிர்ப்பை விளக்குகிறது. முஸ்லிம் பாடசாலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இசை மற்றும் நடனம் அறிமுகப்படுத்தப்பட்டமை அவர் எதிர்கொண்ட மற்றொரு பிரச்சினையாகும். இது அவருக்கு அனைத்து பழமைவாத முஸ்லிம் சக்திகளின் கோபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. அந்த நேரத்தில் பிற்காலத்தில் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியைத் தோற்றுவித்த, வளர்ந்து வரும் முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் கூட, முல்லாக்களுடன் கைகோர்த்து அமைச்சரைக் கண்டித்தார். இதேபோல், தமிழ் சமூகமும் ஒருபோதும் பதியுத்தீன் மஹ்மூதை ஆதரிக்கவில்லை, பல்கலைக்கழக நுழைவுக்கான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, குறிப்பாக வட பகுதி தமிழ் சமூகத்தின் பரம எதிரியாக மாறினார்.

 எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு முஸ்லிம் தொலைநோக்கு பார்வையாளரான பதியுத்தீன் மஹ்மூத் தனது மக்களை ஒரு 'வணிக சமூகம்' என்ற நிலையை மாற்ற விரும்பினார். அவர் தனது மக்களை தேசிய மட்டத்தில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப வேறு திசையில் வழிநடத்த விரும்பினார். இதனை மனதிற்கொண்டு 1972 ஆம் ஆண்டு அவரது கொழும்பு  இல்லத்தில் முக்கிய முஸ்லிம் தலைவர்களை பிற்பகல் தேநீர் விருந்தொன்றுக்கு அழைத்து, பிற்போக்குவாதிகளுடன் இணைந்து தனது அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் உள்ள ஆபத்துகளை உணர்த்தி எச்சரித்தார். பொருளாதார மீட்சிக்கான பிற வழிகளை ஆராயுமாறு தலைவர்களைத் தூண்டினார்.  அவரும் கல்வியை ஒரு வழியாகத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அடங்கிய ஒரு வகுப்பினராக உருவாக்க விரும்பினார். இன்றைய முஸ்லிம் மகா வித்யாலயங்கள் மற்றும் ஒரு முஸ்லிம் புத்திஜீவிகளின் தோற்றம் ஆகியவை பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் தொலைநோக்கின் அமைதியான சான்றுகள் எனலாம். இதையெல்லாம் செய்வதில், அவர் தனது கட்சித் தலைவரான சிரிமாவோ அம்மையாரின் பூரண நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.

பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின்; பிரதான கவலையாக இருந்தது பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பைப் பற்றியது அல்ல. அவருடைய பிரதமரின் ஆதரவுடன் அவற்றை அவரால் சமாளிக்க முடிந்தது, ஆனால் தனது சொந்த சமூகத்திலிருந்து வந்த எதிர்ப்பைப் பற்றியே அவர் கவலை கொண்டார். அதனை சமாளிப்பதற்காகவே அவர் இஸ்லாமிய சோஸலிச முன்னணியை (Islamic Socialist Front) உருவாக்கினார், அதன் பின்னால் முஸ்லிம் ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுவாக முஸ்லிம் இளைஞர்களை அணிதிரட்டினார்.  இஸ்லாமிய சோஸலிச முன்னணியின் எழுச்சி, .தே..வின் முக்கியஸ்தர்களில் ஒருவரான எம். எச். முகமதுவின் கீழ், மார்க்சிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்க தூண்டியது. அதன் பின்னால் அனைத்து மத பழமைவாதிகளும் திரண்டனர். அலி ஸப்ரியின் தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு (National Muslim Collective Forum )இஸ்லாமிய சோஸலிச முன்னணியின்  புதிய பதிப்பா? என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.

சுருக்கமாக, கோத்தாபயவின் அலி ஸப்ரி ஆற்றல் மிக்கவர், புத்திசாலி, தொழில்சார் வல்லுர் மற்றும் சிரிமாவோ அம்மையாரின் பதியுத்தீன் மஹ்மூதைப் போன்று, அவர் 'கட்டுப்பாடான நல்லொழுக்கமுள்ள' சமுதாயத்தைப் பற்றிய கோத்தாபயவின் சொந்த தொலைநோக்கிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முஸ்லிம் சமூகத்தை ஒரு புதிய திசையில் இழுக்க விரும்புகிறார். ஆனாலும், அவர் எதிர்கொள்ளும் சவால்கள் வலிமைமிக்கவை. தீவிர எதிர்ப்பைக்  காட்டும் சிங்கள-பௌத்த இன-தேசியவாதம் மற்றும் இஸ்லாமிய பழமைவாதம் அவற்றில் இரண்டாகும், இதற்கு மேலதிகமாக தமிழ் சமூகத்துடனான நல்லிணக்க பிரச்சினையும் உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதார வளர்ச்சியே நல்லிணக்கத்திற்கான ஒரே வழி என்று கோத்தாபய நம்புகிறார். இது குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவது போல சிக்கலானதாகவே இருக்கும். கோத்தாபயவுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையிலான ஒரு பாலமாக அலி ஸப்ரியால் இருக்க முடியுமா? அமைச்சரவையில் உள்ள ஒரே முஸ்லிம் அமைச்சர் என்பதால், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக அவரது செயல்திறனைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும், மேலும் அவர் சிரிமாவோ அம்மையாரின் பதியுத்தீன் மஹ்மூதுடன்; பொருந்தி வருவாரா என்றும் பார்க்கலாம். பதியுத்தீன் மஹ்மூத் தனது சமூகத்தின் நிலையை முன்னேற்றுவதற்காக எவ்வளவோ செய்தும்  முடிவில் 1977 ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தபோது சமூகம் அவரை நிராகரித்தது. முஸ்லிம்களின் நன்றியுணர்வு பற்றிய இந்த உண்மையை அலி ஸப்ரி நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

 *Dr. Ameer Ali, School of Business and Governance, Murdoch University, Western Australia

Tamil translation: Mohamed Razeen