Friday, July 3, 2020


முஸ்லிம் தலைவர்களின் முன்னோடி 

வாப்பிச்சி மரிக்கார் அவர்களின் அருமைப் புதல்வர் அப்துல் றகுமான், ஹாஜரா தம்பதியினருக்கு ஏகபுதல்வனாக 29-12-1893 இல் ராஸிக் பரீத் அவர்கள் பிறந்தார்கள். செல்வி பேர்டினன்ட் என்பவரின் கல்விக் கூடத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற சேர் ராஸிக்  அல்-மதுரஸதுல் ஸாஹிராவில் அறபு மொழியையும், புனித குர்ஆனையும் கற்று தனது பதினோராவது வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து கேம்பிரிஜ் ஜுனியர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ராசிக் பரீத் அவர்கள் 1915 ஆம் ஆண்டு தனது 22வது வயதில் இலங்கைப் பாதுகாப்புப் படையில் கோப்ரலாக சேர்ந்தார். 1930ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபை உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த ராஸிக் பரீத் 1945ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகப் பதவி வகித்தார். பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார். 1947 முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1948 சுதந்திரத்திற்கு பின்னர்  செனட் சபை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.

1952ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் 1956ஆண்டு தேர்தலிலும் கொழும்பு மத்திய தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேர் ராஸிக் பரீத் 1959ம் ஆண்டு பிரதமர் பண்டாரநாயக்கவின் இறப்பைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட பிரதமர் தஹநாயக்கவின் அமைச்சரவையில் வாணிபத்துறை அமைச்சராகப்  பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு மார்ச் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றாலும். 1960ஆண்டு ஜூலை மாத தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

1930களில் ஆங்கிலக் கல்வியினதும் பெண் கல்வியினதும் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமுதாயத்திற்கு முன்வைத்த போது, அவர் சமுதாயத்தின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார். எனினும் எல்லாத் தடைகளையும்  தாண்டி தனது சொந்த செலவில் சொந்தக் காணியில் 1946ம் ஆண்டு கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியை உருவாக்கினார். அதன் அதிபராக ஆயிஷா ரவூப் என்பவர் நியமிக்கப்பட்டார். இங்கு வழங்கப்பட்ட ஆங்கில மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் நாலா புறமிருந்தும் பெண்கள் வந்து குவிந்தமையால் விடுதி வசதியும் செய்யப்பட்டது. அதேநேரம், 1938- 1947 காலப்பகுதியில் சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா அவர்களைத் தலைவராகக் கொண்ட அரசாங்க சபைக் கல்விக்குழுவில் கடமையாற்றிய சேர் ராஸிக் பரீத் அவர்கள், கிராமப் புறங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பாடசாலைகளை நிறுவும் பணியிலும் வெற்றிகண்டார்.

1937ம் ஆண்டு முஸ்லிம்களுக்கான தனியான ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஒன்றின் தேவையை அரசாங்க சபையில் வலியுறுத்தி 1941ம் ஆண்டு அட்டாளைச்சேனை மற்றும்  தர்கா நகர் ஆகிய இடங்களில் ஆசிரிய கலாசாலைகள் ஆரம்பிப்பதற்கு வழிவகுத்தார். அத்துடன் ஆசிரிய சேவைக்கு அதிக முஸ்லிம்களை இணைத்துக்கொள்வதிலும் அவர்களது முன்னேற்றத்திலும் அதிக அக்கறை காட்டினார். அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் பொருட்டு இலங்கை முஸ்லிம் ஆசிரியர் சங்கத்தை அமைப்பதிலும் அவர் வெற்றி கண்டார். அறிஞர் அஸீஸ் மற்றும் சபாநாயகர் எச்.எஸ். இஸ்மாயில் ஆகியோர் கல்வி தொடர்பான அவரது முற்போக்குத் திட்டங்களுக்குத் துணை நின்றனர்.

பெற்றோர் தமது பிள்ளைகளுக்குக் கட்டாயமாக அறபு மொழியைக் கற்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய அவர், முஸ்லிம் சிறார்களுக்கு பாடசாலைகளில் அறபு மொழி கற்பிப்பதற்குப் பிரத்தியேக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவர்களை மேற்பார்வை செய்வதற்கு அறபு மொழிக் கல்வியதிகாரிகளையும் நியமிக்க வேண்டுமென 1936இல் அரசாங்க சபையில் பிரேரணையொன்றை முன்வைத்து வெற்றிகண்டார்.

1946ம் ஆண்டு சுதேச மருத்துவக்கல்லூரியில்  இயங்கும் யூனானி மருத்துவப் பிரிவை மூடிவிட முடிவுசெய்தபோது, அன்றைய  செனட் சபையில் சேர் ராஸிக் பரீத் அவர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு யூனானி மருத்துவத்தின் தேவைப்பாட்டை சபைக்கு தெளிவுபடுத்தினார். அவரது நியாயமான எதிர்ப்பை ஏற்ற சபை 1947ம் ஆண்டு யூனானி மருத்துவப் பிரிவை தொடர்ந்து இயங்க அனுமதி அளித்ததோடு அதன் வளர்ச்சிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு இன்றுவரை சேவையாற்ற வழி சமைத்தார்.

தமிழ் மொழிப் பாடசாலைகளில் ஆரம்பத்தில் முஸ்லிம்களது கலாசாரத்தோடு இணைந்த நூல்கள் அரிதாகவே இருந்தன. இதனால் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் மூலம் .எல்.எம். இஸ்மாயீல், எஸ். பி. சாமிநாதன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு 'முஸ்லிம் பாலர் வாசகம்' என்ற நூலை வெளியிட்டார்.

பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகவும் உப சபாநாயகராகவும் சிறிது காலம் பணியாற்றிய பின் 1968இல் பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட சேர் ராஸிக் பரீத் அவர்கள்  தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி 23-08-1984 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். 1948இல் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு 'சேர்' பட்டம் அளித்து கௌரவித்தது. நாட்டுக்கும் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பணிக்காக 1988ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தேசிய வீரர் நினைவு முத்திரையை ஒன்றை வெளியிட்டது.
தலை நகரில் தலை நிமிர்ந்து நிற்கும் அவரது சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் முஸ்லிம் சமய, கலாசார விடயங்களை மேம்படுத்துவதிலும் அவர்களது உரிமைகளை வென்றெடுப்பதிலும் அளப்பரிய பணிகளை ஆற்றி வருகின்றது.

1880ம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் முஸ்லிம்களுக்கான தனியான பிரதிநிதித்துவ கருத்து முன்வைக்கப்பட்ட போது அதற்கெதிராக திரு. பொன்னம்பலம் ராமநாதன்  அவர்கள் 1885ம் முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்களின் ஒரு பிரிவினரே என்றும் அதற்குத் தனியான பிரதிநிதித்துவம் அவசிமில்லை என்றும் வாதாடினார். அப்போது அதற்கெதிரான மர்ஹூம் . எல். எம் அஸீஸ் மற்றும் அறிஞர் சித்திலெப்பை போன்றோரின்  போராட்டத்தின் விளைவாக 1889ம் ஆண்டு ஒக்டோபர் 29ம் திகதி முதலாவது முஸ்லிம்களுக்கான தனிப்பிரதிநிதித்துவம் அங்கீகரிக்கப்பட்டு ஜனாப் அப்துர் ரஹ்மான் அவர்கள் நியமனமும் பெற்றார்கள். முஸ்லிம்களின் தனிப்பிரதிநிதித்துவ போராட்டத்திற்கான ஜனாப். .எல்.எம். அப்துல் அஸீஸ் அவர்களின் ஆய்வை 1907ம் ஆண்டு சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் 'இலங்கைச் சோனகர் இன வரலாறு' என்ற பெயரில் வெளியிட்டது. பிற்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோதெல்லாம் ராஸிக் பரீத் அவர்களும் இக்கருத்தை வலியுறுத்தி சட்ட மன்றங்களில் உரையாற்றினார்.

அவர் கட்சி அரசியலுக்கு அப்பால், எல்லா அரசாங்கங்களுக்கும் தனது ஆதரவை சேர் ராஸிக் ஓக்கிட் மலர் வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டினார். எப்போதும் தமது கோட்டில் ஓக்கிட் மலரொன்றை வைத்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அந்த மலரைப் போலவே அவர் மென்மையான மனதைக்கொண்டவராகவும் இருந்தார். சிங்களமுஸ்லிம் நல்லுறவைக் கட்டிவளர்த்தவர் என்ற வகையில் அவர் சகல இனத்தவர்களாலும் மதிக்கப்பட்டார்.
 
நல்கி, அதன்மூலம் சமூகத்திற்குப் பல நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தார். அதில் பெருமிதமும் மனநிறைவும் கொண்டார். ஒருமுறை அவரை நோக்கி ஒரு பத்திரிகையாளர் அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே உங்களுக்கு நிலையான ஒரு கொள்கை இல்லையா? என்று கேட்க, சேர் ராஸிக் அவர்கள் 'அப்படி இல்லையே எப்போதும் நான் அரசாங்கக் கட்சியில்தானே இருக்கிறேன்' என்று பதிலளித்தார்.

சேர் ராஸிக் ஓக்கிட் மலர் வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டினார். எப்போதும் தமது கோட்டில் ஓக்கிட் மலரொன்றை வைத்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அந்த மலரைப் போலவே அவர் மென்மையான மனதைக்கொண்டவராகவும் இருந்தார். சிங்களமுஸ்லிம் நல்லுறவைக் கட்டிவளர்த்தவர் என்ற வகையில் அவர் சகல இனத்தவர்களாலும் மதிக்கப்பட்டார்


 - முஹம்மத் றஸீன்




Monday, June 29, 2020


மூன்றாவது பிரதமர்

இலங்கையின் மூன்றாவது பிரதமரான ஜோன் லயனல் கொத்தலாவல ஒரு வளமிக்க குடும்பத்தில் 1895 ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பிறந்தார். இலங்கை காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய அவரது தந்தை ஜோன் கொத்தலாவல, ஜோன் லயனல் கொத்தலாவல 11 வயதாக இருக்கும் போது ஒரு கொலைக் குற்றச்சாட்டை அடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது தாயார் தமது நிலங்களையும் காரீய சுரங்கங்களையும் முறையாக மேலாண்மை செய்ததன் மூலம் பெரும் சொத்துக்களை ஈட்டினார்

ஜோன் லயனல் கொத்தலாவலை கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். 1915 ஆம் ஆண்டில் விடுதலைக்கு ஆதரவான சில நடவடிக்கைகளில் பங்குபற்றி யமையால் பாடசாலையை விட்டு விலக நேரிட்டது. அதன் பின்னர் ஐரோப்பா சென்ற அவர் இங்கிலாந்திலும், பிரான்சிலும் ஐந்தாண்டுகள் வரை தங்கியிருந்தார். அக்காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிறைஸ்ட் சேர்ச் கல்லூரியில் வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றார். அவரது சமூக சேவைகளுக்காக அவருக்கு பிரித்தானிய அரசின் உயர் விருது கிடைத்தது. அதன்பின் அவர் சேர் ஜோன் கொத்தலாவல என அழைக்கப்பட்டார்.

இளம் வயதில் கிரிக்கட், குதிரையேற்றம் உட்படப் பலவித விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். சிங்களம், ஆங்கிலம், பிரான்சிய மொழிகளில் பெரும் புலமை பெற்றிருந்தார். இலங்கை திரும்பிய அவர் தமது குடும்பத்தின் தோட்டங்களையும் சுரங்கங்களையும் நிருவகித்து வந்ததோடு தீவிர அரசியலிலும் ஈடுபட்டார். 1937இல் அரசாங்க சபையில் போக்குவரத்து பொது வேலைகள் அமைச்சராக நியமனம் பெற்ற அவர் 1947 பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று அதே அமைச்சர் பதவியைப் பெற்றார். 

டீ.எஸ். சேனாநாயக்காவின் மரணத்தைத்தொடர்ந்து இலங்கையின் இரண்டாவது பிரதமராகும் வாய்பை எதிர்பார்த்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சேர் ஜோன் கொத்தலாவலை, அன்றைய ஆளுனர் நாயகம் அப்பதவிக்கு டட்லி சேனாநாயக்காவை  நியமித்ததன் காரணமாக அந்த வாய்பை இழந்தார். ஆனால் 1952இல் இடதுசாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தாலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் டட்லி சேனாநாயக்க பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக சேர் ஜோன் கொத்தலாவல இலங்கையின் மூன்றாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். 1956 தேர்தலில் அடைந்த படுதோல்வி காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி பல வருடங்களை இங்கிலாந்தில் கழித்தார். எவ்வாறாயினும், சில வருடங்களின் பின் ஆளுனர் நாயகத்தின் பதவிக் காலம் முடிவடையும் தறுவாயில் அப்பதவியைப் பெறும் எண்ணத்தோடு நாடு திரும்பினார். ஆனால் அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்க ஆளுனர் நாயகம் திரு. வில்லியம் கொபல்லாவையின் பதவிக் காலத்தை நீட்டித்ததால் அவரது ஆசை நிராசையாகியது.

இலங்கை இராணுவ சேவையில் ஒரு கர்ணலாக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல, மரணப் படுக்கையில் இருக்கும் தறுவாயில் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டார்.

1953ஆம் ஆண்டு நாம் சிறுவர்களாக இருந்தபோது கம்பளையில் எமது கிராமமான இல்லவத்துரையில் ஜமாஅத்துல் ஹிதாயா என்ற சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு இரவுப் பாடசாலையைத் திறந்து வைப்பதற்காக சேர் ஜோன் கொத்தலாவல வருகை தந்தார். அந்த வைபவத்தில் அவர் மிக மகிழ்ச்சியாக, எனது நண்பன் ஒருவனைத் தனது மடியில் இருத்தி , பி, ஸீ, டீ...என்ற ஆங்கில அரிச்சுவடியை சொல்லிக்கொடுத்து அப்பாடசாலையை ஆரம்பித்து வைத்த சம்பவம் எமதுள்ளங்களில் இன்றுவரை நீங்காத இடம் பெற்றுள்ளது.
அவர் பெரும் செல்வந்தராகவும் அரசியல் செல்வாக்கு உடையவராக இருந்தாலும் எளிமையாகவே வாழ்ந்தார். அவர் அரசியலில் சொத்து சேர்க்கவில்லை. மாறாக அவர் பிறவியிலேயே பெரும் செல்வந்தராக இருந்தார்.

அவர் சிறந்த பரோபகாரியகவும் நேர்மையான மனிதராகவும் இருந்தபோதிலும் அவரது முன்கோபம், அரசியலிலும் அரசாங்க விவகாரங்களிலும் அவரது விவேகமற்ற அவசர முடிவுகள், எந்த ஒரு சிக்கலான விடயத்தையும் ராஜதந்திர ரீதியில் அணுகாமல் நேரடியாகவே தீர்க்க முயன்றமை போன்றவை அவரை அரசியலில் முன்செல்ல விடாமல் தடுத்ததோடு அரசியல் எதிரிகளைத் தேடிக்கொள்வும் வழி வகுத்தது. அதற்கு அவர் கலந்துகொண்ட இந்தோனீஷிய பாந்துங் மாநாடு மற்றும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் அவரது நடவடிக்கைள் என்பன சிறந்த உதாரணங்களாகும்.

அவரது திருமண வாழ்வும் வெற்றிகரமாக அமையாது விவாகரத்தில் முடிந்தது. இறுதியில் 1980ஆம் ஆண்டு அக்டோர் இரண்டாம் திகதி அவர் உயிர் துறப்பதற்கு முன் பாதுகாப்புப் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்காக  தனது கந்தவெல வீட்டையும் 50 ஏக்கர் காணியையும் நன்கொடையாக வழங்கினார்.

பின்னர் அது 'ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக் கழகம்' என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இன்று அது ஒரு பூரணத்துவம் பெற்ற ஒரு பல்கலைக் கழகமாக இயங்கி வருகிறது. 1993இல் சேர். ஜோன் கொத்தலாவலை அருங்காட்சியகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

ஆக்கம்: முஹம்மத் றஸீன்