Saturday, July 11, 2020


மலாய் சமூகத்தில் உதித்த மாபெரும் தலைவர்

மலாய் சமூகத்தைச் சேர்ந்த துவான் புர்கானுத்தீன் ஜாயா, இலங்கையின் கண்டி மாவட்டத்தில் கலகெதரை என்ற ஊரில் 1880 ஜனவரி முதலாம் திகதி பிறந்தார். குருநாகல எங்லோ வெர்னாகியுலர் பாடசாலை, கண்டி சென் போல்ஸ் கல்லூரி, கல்கிஸ்ஸ சென் தோமஸ் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். 10 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஜாயா கல்வியில் காட்டிய திறமை காரணமாக முதலாம் தரத்திலிருந்து 4ஆம் தரத்திற்கும் பின்னர் 4ஆம் தரத்திலிருந்து 6ஆம் தரத்திற்கும் வகுப்பேற்றப்பட்டார்.

1913 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக் கழகப் பட்டதாரியாக கண்டி தர்மராஜா கல்லூரி, மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றியதன்பின் சட்டக் கல்லூரியில் இணைந்தார். அவர் அங்கு இறுதி ஆண்டில் கல்வி பயிலும்போது மருதானைப் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவரும் பிரபல கொடை வள்ளலுமான என்.டீ.எச். அப்துல் கபூரின் வேண்டுகோளைத் தட்ட முடியாது வழக்கறிஞராகவேண்டும் என்ற ஆசையைப் புறந்தள்ளி 1921 ஆம் ஆண்டில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதிபர் பதவியில் அமர்ந்தார்.

இவரது காலத்தில் இக்கல்லூரி கல்வியில் மட்டுமன்றி விளையாட்டு, இலக்கியம், போன்ற பல்வேறு துறைகளிலும் பெரும் வளர்ச்சி கண்டது. 59 மாணவர்களுடனும் 6 ஆசிரியர்களுடனும்  அக்கல்லூரியைப் பொறுப்பேற்ற ஜாயா அவர்கள் 27 வருடங்கள் சேவையாற்றிய பின் 3500 மாணவர்களுடனும் 150 ஆசிரியர்களுடனும் .எம்.. அஸீஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். ஜாயாவின் காலம் ஸாஹிராவின் பொற்காலம் எனலாம்.

இவரது காலத்தில் கல்லூரியின் கிளைகள் மாத்தளை, அளுத்கமை, புத்தளம், கம்பளை ஆகிய நகரங்களில் நிறுவப்பட்டது. பின்னர் இவை தனித்தனிப் பாடசாலைகளாக மாறி அந்நதந்த நகரங்களின் பிரபல பாடசாலைகளாக உருவெடுத்தன. ஜாயா அவர்களின் மாணவரான கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் நாட்டின் கல்வி அமைச்சரானதும் முஸ்லிம் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட்டதோடு புதிய பல பாடசாலைகளும் தோன்றின.

ஜாயா அவர்கள் 1924 ஆம் ஆண்டில் முஸ்லிம் உறுப்பினராக இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தீவிர அரசியலில் கால் பதித்தார். 1931 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் கொழும்பு மத்தியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் 1936 இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் நியமன அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1947 ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரான ஜாயா அவர்கள்  1947 இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதியில்; .தே,. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரே சுதந்திர இலங்கையின் முதல் முஸ்லிம் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.

1947இல் கம்பளையில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்தபோது ஜாயா அவர்கள் தனது சமூகசேவை அமைச்சின் மூலமாக கம்பளை, மரியாவத்தை என்ற இடத்தில் ஒரு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படுவதற்கு வழி வகுத்தார். அன்றைய கால கட்டத்தில் அது ஒரு மாபெரும் வீடமைப்புத் திட்டமாகக் கருதப்பட்டது. இன்று அது நகரை அண்மியதாக, வளர்சியடைந்த பெருங் கிராமாகக் காணப்படுகிறது. இதனைப் பெரும்பாலான கம்பளைவாசிகளே அறிந்திருக்கமாட்டார்கள். இது அக்கால அரசியவாதிகள் இக்கால அரசியல்வாதிகளைப்போல விளம்பரத்துக்காக சேவையாற்றவில்லை என்பதையே காட்டுகிறது.  

அன்று இரண்டாம் உலகயுத்தத்தினை வெற்றி கொள்ளும் நோக்கில் பிரித்தானியர்கள் ஒரு வியூகத்தை வகுத்தார்கள். அவர்களது காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகள் யுத்தத்தில் பிரித்தானியர்களுக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அந்நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதாக அறிவித்திருந்தார்கள். அதே போல் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்தை வழங்குவதற்கான ஒரு தகுதியாக, சிறுபான்மையினர் பாதிக்கப்படாதிருக்க 3/4 இற்கு அதிகமான பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை விடுத்தனர். ஆனால் இலங்கையின் பெரும்பான்மையான பௌத்த சிங்களவர்களால் தனித்து இந்த பெரும்பான்மையைக் காண்பிக்க முடியாதிருந்தது. அந்த காலகட்டத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் சட்டசபையில் 50:50 என்ற நிபந்தனையோடு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்க நிபந்தனை விதித்தார்.

இது பற்றி டீ.பி.ஜாயா அவர்கள் ஆற்றிய உரையில் 'நான் இங்கு சிறுபான்மை சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றியோ அல்லது பெரும்பான்மை இனத்தின் வெற்றி பற்றியோ கூற முன்வரவில்லை. இச்சபையிலுள்ள முஸ்லிம் அங்கத்தவர்கள் மசோதாவை ஆதரிப்பதற்கான ஒரே காரணத்தைக்கூற விரும்புகின்றேன். இந்த நாடு சுதந்திரமடைவதற்காக எமது சமூகத்திற்குக் கிடைக்கவிருக்கும் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் நாம் தியாகம் செய்யத் தயாராயுள்ளோம். நான் இதனை முழு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன் அவர்கள் சார்பாகக் கூறுகின்றேன்.' என்றார்.
பின்பு இதனையே சேர் ராசிக் பரீதும் ஆதரித்து உரையாற்றினார். இவ்வுரை பலரின் பாராட்டைப் பெற்றதோடு டெமீனியன் மசோதா நிறைவேற்றப்பட்டு நாடு சுதந்திரம் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. இதன் காரணமாக அவர் தேசிய வீரராக அங்கீகரிக்கப்பட்டு அவர் பெயரில் முத்திரையொன்றும் வெளியிடப்பட்டதோடு பாடப் புத்தகங்களிலும் அவர் பற்றிய விபரங்கள் இணைக்கப்பட்டன.

அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பல உயர் பதவிகளை வகித்ததோடு பாராளுமன்றத்தில் அவருடன் சமமாக அமரும் பாக்கியத்தையும் பெற்றனர். அவர்களுள் ஆனந்தா கல்லூரியில் கற்ற இன்றைய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தந்தையான 'மார்க்சிஸத் தந்தை' என அழைக்கப்பட்ட பிலிப் குணவர்தன, ரொபர்ட் குணவர்தன, என்.எம். பெரேரா என்போரும் அடங்குவர்.

ஒருமுறை பிலிப் குணவர்தனவின் குறும்புகளை சகிக்க முடியாத அன்றைய அதிபர் பீ.டீ.எஸ். குலரட்ன அவரைப் பாடசாலையைவிட்டு விலக்குவதற்குத் தீர்மானித்தார். அவரது ஆசிரியரான டீ,பி. ஜாயாவை அழைத்து 'இந்தப் பையனை இனியும் இப்பாடசாலையில் வைத்திருக்க முடியாது' என்று கோபத்துடன் கூறினார். அதற்கு ஜாயா  அமைதியாக 'சேர் இவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் மீண்டும் இவர் ஏதாவது பிரச்சினை ஏற்படுத்தினால் இவரைப் பாடசாலையைவிட்டு நீக்குவது மட்டுமல்ல நானும் இந்தத் தொழிலை விட்டு வேறொரு தொழிலைத் தேடிக்கொள்கிறேன்' என்றார். ஜாயாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மீண்டும் சேர்த்துகொள்ளப்பட்டார். பின்னர் அவர் படித்துப் பட்டம் பெற்று நாட்டுக்கும் கல்லூரிக்கும் பேரும் புகழும் தேடிக் கொடுத்தமை அனைவரும் அறிந்த விடயம்.

1950இல் டீ.பி. ஜாயா அவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகராக சென்றார். பாகிஸ்தானின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு ஜாயா அளித்த பங்களிப்புக்காக அவருக்கு 'கௌரவப் பிரஜை' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதோடு பஞ்சாப் பல்கலைக் கழகம் அவருக்கு கலாநிதிப் பட்டமளித்துக் கௌரவித்தது. இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் யாத்ரீகர்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு சவுதி அரேபியாவில் சிலோன் ஹவுஸ் என்ற ஒரு விடுதியை அமைப்பதிலும் அவர் வெற்றி கண்டார்.

1960 மே மாதம் 31ஆம் திகதி  மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போது மதீனாவில் காலமாகி ஜென்னத்துல் பக்கியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

- முஹம்மத் றஸீன்













Tuesday, July 7, 2020

உலகின் முதல் பெண் பிரதமர்

1916 ஏப்ரல் 16ம் திகதி பார்ன்ஸ் ரத்வத்த திசாவ மற்றும் மஹவெலத்தன்ன குமாரிஹாமி தம்பதிகளுக்கு மூத்த புதல்வியாகப் பிறந்தவர்தான் சிறிமாவோ ரத்வத்த. அவர் பிறந்த நேரத்தில்  யானைக்கூட்டம் ஒன்று வீட்டின் வளவுக்குள் பலவந்தமாக நுழைந்தாகவும் அது ஒரு நல்ல சகுனமாகக் கருதப்பட்டதாகவும் கூறப்படுகின்றது

சிறிமாவின் ஜாதகத்தை கணித்த ஒரு ஜோசியர் அவர் இந்நாட்டின் அரசியாகும் யோகம் கொண்டவர் எனக் கூறினார். அக்காலத்தில் இலங்கை பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தமையால் 'அதெப்படி ஒரு பெண்ணால் நாட்டை ஆளமுடியும்?' என்ற எண்ணத்தில் அனைவரும் அதனை  வெறும் வேடிக்கைப் பேச்சாகவே கருதினர்.

கொழும்பு சென். பிரிஜட்ஸ் கல்லூரியில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை கல்வி கற்ற சிறிமாவோ தன்னை விட 17 வயது மூத்த ஹொரகொல்ல வளவேயின் மஹாமுதலியாரின் புதல்வரான எஸ்.டபிள்யூ.ஆர்.டீ பண்டாரநாயக்கவை மணந்து கொண்டார். சிறிமாவோ ரத்வத்த, இலங்கையின் பிரபல்யம் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்து இன்னொரு பிரபல்யம் மிக்க குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்ட ஒரு சீமாட்டியாக வாழ்ந்தார். இந்தத் திருமணம் மலைநாட்டு சிங்களவர்களுக்கும் கரைநாட்டு சிங்களவர்களுக்கும் இடையேயான ஒன்றிணைப்பாக அன்று பேசப்பட்டது.

அரசியலுக்கு பின்னரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் வாழ்க்கை குறித்து பல்வேறு கருத்துக்களும், விமர்சனங்களும் நிலவுகின்றது. இருப்பினும் ஒரு மகளாக, மனைவியாக, அன்னையாக அவர் கடந்துவந்த வாழ்க்கையின் அத்தியாயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பண்டாரநாயக்கவின் திடீர் மறைவும், தஹநாயக்கவின் நிர்வாகமும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்தது. சுதந்திர கட்சியின் நிலைகுறித்து கவலை கொண்ட கட்சி ஆதரவாளர்கள் சிறிமாவோவின் ஆதரவை வேண்டி நின்றனர். ஆரம்பத்தில் தீர்க்கமாக மறுப்பு தெரிவித்த போதிலும், ஒரு கட்டத்தில் கணவருடைய  கட்சிக்காக தான் ஆற்ற வேண்டிய கடமையை உணர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தேர்தல் அரங்குகளில் கட்சிக்காக பிரசாரங்களை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார்
.
1960 மார்ச் 19இல் முடிவடைந்த தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. ஆட்சியமைத்த .தே.கட்சி 30 நாட்களில் நடைபெற்ற சிம்மாசனப் பிரசங்கத்தின்  மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்தமையால் புதிய தேர்தலொன்றுக்கான சூழ்நிலை உருவானது. அதே ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற தேர்தலிலும் சிறிமா தீவிரமாகப் பங்கெடுத்தார். ஆனால் இதனை சிறிமாவோவின் உறவினர்கள் விரும்பவில்லை.

'சிறிமாவோவின் செயலால் குடும்ப கௌரவம் குலையப்போகிறது' என அவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டனர். ஆனால்  பண்டாரநாயக்கவின் கனவை நினைவாக்க முடிந்தவரை போராட வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குக் கைமேல் பலன் கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மொத்தமாக 75 ஆசனங்களை கைப்பற்றி ஒரு பலமான ஆட்சியை அமைத்தது.

அவர் பிறந்த போது ஜோசியர் கூறியதை மெய்ப்பிப்பது போல, உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பதவியை  ஏற்று உலக அரசியல் வரலாற்றில் நிலையானதொரு பெயரைப் பெற்றார். அதற்குப் பின்னரே மார்க்ரட் டச்சர், கோல்டா மேயர் மற்றும் இந்திரா காந்தி போன்ற பிரபலமான பிரதமர்கள் உலகில் உருவானார்கள்.

1960 தொடக்கம் 1965 வரை பிரதமராகப் பணியாற்றிய அவர், 1965 முதல் 1970 வரை எதிர்க்கட்சிக் கட்சித் தலைவராக இருந்தார். 1970 முதல் 1977 வரையான சிறிமாவோவின் ஆட்சி காலத்தில் இலங்கையின் வரலாறானது ஒரு புதிய கோணத்தில் நகர ஆரம்பித்தது. இலங்கை சுதந்திரம் அடைந்திருந்த போதிலும் பிரித்தானிய அரசரே இலங்கையின் அரசர் என்ற நிலையை மாற்றி, சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கையைப் பூரண இறையாண்மை மிக்க ஒரு குடியரசாக மாற்றியமைத்தார். அதுவரை சிலோன் என்று அறியப்பட்ட நம்நாடு 1972 முதல் ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற புதிய பெயரை பெற்றது.
எவ்வளவுதான் அறிவுஜீவிகளை அதிகமாகக் கொண்டிருந்த ஒரு முற்போக்கு அரசாங்கமாக அவரது ஆட்சி அமைந்திருந்தாலும் அரசாங்கத்துக்குள்ளேயே இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்குமிடையலான பணிப்போர் நாட்டின் அபிவிருத்தியைப் வெகுவாகப் பாதித்தது. 1975இல் இடதுசாரிகளின் வெளியேற்றம், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தொடர்பான தவறான பிரசாரங்கள், 1971 ஜே.வி.பி கிளர்ச்சி போன்றவற்றால் அரசாங்கம்  பெரும் சிக்கலுக்கும் சங்கடங்களுக்கும் முகம் கொடுத்தது.

எவ்வாறாயினும்,; பாடசாலைகள் மற்றும் பல முக்கிய நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டமை, புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டமை, சிறிமா-சாஸ்த்ரி உடன்படிக்கை, உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும்பொருட்டு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை மற்றும் தொழில் வாய்புகளை அதிகரிப்பதற்காக பல கைத்தொழில்கள் உருவாக்கப்பட்டமை போன்ற பல முற்போக்குத்திட்டங்கள் இவருடைய காலத்திலேயே இடம்பெற்றன. ஆனால் மக்கள் இவற்றையெல்லாம் வேறொரு கோணத்திலேயே நோக்கினர்

இந்த நிலையில் 1977 தேர்தலுக்கு முகம் கொடுத்த சிறிமாவோ அம்மையாருக்கு அது ஒரு பேரிடியாகவே அமைந்தது. 1958இல் எவ்வாறு பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டு அவரது முற்போக்குத் திட்டங்கள் முடக்கப்பட்தோ அவ்வாறே ஜே.ஆர். பிரதமரானதும் சிறிமாவோவின் குடியுரிமை உட்பட பல சலுகைகள் பறிக்கப்பட்டு அவர் மீண்டும் தலைதூக்காவண்ணம் ஏறக்குறைய ஒரு தசாப்தத்துக்கு முடக்கி வைக்கப்பட்டார்

1986இல் குடியுரிமையை மீளப் பெற்றதும்; 1989 தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவராகிய திருமதி பண்டாரநாயக்க, 1994இல் தனது மகள் சந்திரிகா குமாரதுங்கவின் ஜனாதிபதி ஆட்சியில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். இறுதியில் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சிறிமாவோ பண்டாரநாயக்க 2000ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் திகதி பொதுத்தேர்தல் ஒன்றில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில் மாரடைப்பால் உயிர் துறந்தார்.

அரசியல் எனும் பகடையாட்டத்துக்கு அன்று சிறிமாவோ அம்மையார் மறுப்பு தெரிவித்திருந்தால் பிரதமரின் இல்லத்தரசி, ஜனாதிபதியின் அன்னை என்றே அவர் நினைவு கூரப்பட்டிருப்பார். அவர் உலகின் முதல் பெண் பிரதமாக மட்டுமன்றி அணிசாரா நாடுகள் அமைப்பின் தலைவியாகவும் உயர்ந்தார்.

அரசியல் என்ற ஆணாதிக்க உலகினை வெற்றிகொண்டு இன்றளவும் உலக வரலாற்றில் நிலையான பெயரைக் கொண்டுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் வாழ்க்கை, அரசியலில் வெற்றிகொள்ள நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உந்துசக்தியாக அமையும் என்பதை யாரும் மறுக்க முடியாது.


  - முஹம்மத் றஸீன்