Tuesday, July 7, 2020

உலகின் முதல் பெண் பிரதமர்

1916 ஏப்ரல் 16ம் திகதி பார்ன்ஸ் ரத்வத்த திசாவ மற்றும் மஹவெலத்தன்ன குமாரிஹாமி தம்பதிகளுக்கு மூத்த புதல்வியாகப் பிறந்தவர்தான் சிறிமாவோ ரத்வத்த. அவர் பிறந்த நேரத்தில்  யானைக்கூட்டம் ஒன்று வீட்டின் வளவுக்குள் பலவந்தமாக நுழைந்தாகவும் அது ஒரு நல்ல சகுனமாகக் கருதப்பட்டதாகவும் கூறப்படுகின்றது

சிறிமாவின் ஜாதகத்தை கணித்த ஒரு ஜோசியர் அவர் இந்நாட்டின் அரசியாகும் யோகம் கொண்டவர் எனக் கூறினார். அக்காலத்தில் இலங்கை பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தமையால் 'அதெப்படி ஒரு பெண்ணால் நாட்டை ஆளமுடியும்?' என்ற எண்ணத்தில் அனைவரும் அதனை  வெறும் வேடிக்கைப் பேச்சாகவே கருதினர்.

கொழும்பு சென். பிரிஜட்ஸ் கல்லூரியில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை கல்வி கற்ற சிறிமாவோ தன்னை விட 17 வயது மூத்த ஹொரகொல்ல வளவேயின் மஹாமுதலியாரின் புதல்வரான எஸ்.டபிள்யூ.ஆர்.டீ பண்டாரநாயக்கவை மணந்து கொண்டார். சிறிமாவோ ரத்வத்த, இலங்கையின் பிரபல்யம் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்து இன்னொரு பிரபல்யம் மிக்க குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்ட ஒரு சீமாட்டியாக வாழ்ந்தார். இந்தத் திருமணம் மலைநாட்டு சிங்களவர்களுக்கும் கரைநாட்டு சிங்களவர்களுக்கும் இடையேயான ஒன்றிணைப்பாக அன்று பேசப்பட்டது.

அரசியலுக்கு பின்னரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் வாழ்க்கை குறித்து பல்வேறு கருத்துக்களும், விமர்சனங்களும் நிலவுகின்றது. இருப்பினும் ஒரு மகளாக, மனைவியாக, அன்னையாக அவர் கடந்துவந்த வாழ்க்கையின் அத்தியாயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பண்டாரநாயக்கவின் திடீர் மறைவும், தஹநாயக்கவின் நிர்வாகமும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்தது. சுதந்திர கட்சியின் நிலைகுறித்து கவலை கொண்ட கட்சி ஆதரவாளர்கள் சிறிமாவோவின் ஆதரவை வேண்டி நின்றனர். ஆரம்பத்தில் தீர்க்கமாக மறுப்பு தெரிவித்த போதிலும், ஒரு கட்டத்தில் கணவருடைய  கட்சிக்காக தான் ஆற்ற வேண்டிய கடமையை உணர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தேர்தல் அரங்குகளில் கட்சிக்காக பிரசாரங்களை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார்
.
1960 மார்ச் 19இல் முடிவடைந்த தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. ஆட்சியமைத்த .தே.கட்சி 30 நாட்களில் நடைபெற்ற சிம்மாசனப் பிரசங்கத்தின்  மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்தமையால் புதிய தேர்தலொன்றுக்கான சூழ்நிலை உருவானது. அதே ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற தேர்தலிலும் சிறிமா தீவிரமாகப் பங்கெடுத்தார். ஆனால் இதனை சிறிமாவோவின் உறவினர்கள் விரும்பவில்லை.

'சிறிமாவோவின் செயலால் குடும்ப கௌரவம் குலையப்போகிறது' என அவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டனர். ஆனால்  பண்டாரநாயக்கவின் கனவை நினைவாக்க முடிந்தவரை போராட வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குக் கைமேல் பலன் கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மொத்தமாக 75 ஆசனங்களை கைப்பற்றி ஒரு பலமான ஆட்சியை அமைத்தது.

அவர் பிறந்த போது ஜோசியர் கூறியதை மெய்ப்பிப்பது போல, உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பதவியை  ஏற்று உலக அரசியல் வரலாற்றில் நிலையானதொரு பெயரைப் பெற்றார். அதற்குப் பின்னரே மார்க்ரட் டச்சர், கோல்டா மேயர் மற்றும் இந்திரா காந்தி போன்ற பிரபலமான பிரதமர்கள் உலகில் உருவானார்கள்.

1960 தொடக்கம் 1965 வரை பிரதமராகப் பணியாற்றிய அவர், 1965 முதல் 1970 வரை எதிர்க்கட்சிக் கட்சித் தலைவராக இருந்தார். 1970 முதல் 1977 வரையான சிறிமாவோவின் ஆட்சி காலத்தில் இலங்கையின் வரலாறானது ஒரு புதிய கோணத்தில் நகர ஆரம்பித்தது. இலங்கை சுதந்திரம் அடைந்திருந்த போதிலும் பிரித்தானிய அரசரே இலங்கையின் அரசர் என்ற நிலையை மாற்றி, சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கையைப் பூரண இறையாண்மை மிக்க ஒரு குடியரசாக மாற்றியமைத்தார். அதுவரை சிலோன் என்று அறியப்பட்ட நம்நாடு 1972 முதல் ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற புதிய பெயரை பெற்றது.
எவ்வளவுதான் அறிவுஜீவிகளை அதிகமாகக் கொண்டிருந்த ஒரு முற்போக்கு அரசாங்கமாக அவரது ஆட்சி அமைந்திருந்தாலும் அரசாங்கத்துக்குள்ளேயே இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்குமிடையலான பணிப்போர் நாட்டின் அபிவிருத்தியைப் வெகுவாகப் பாதித்தது. 1975இல் இடதுசாரிகளின் வெளியேற்றம், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தொடர்பான தவறான பிரசாரங்கள், 1971 ஜே.வி.பி கிளர்ச்சி போன்றவற்றால் அரசாங்கம்  பெரும் சிக்கலுக்கும் சங்கடங்களுக்கும் முகம் கொடுத்தது.

எவ்வாறாயினும்,; பாடசாலைகள் மற்றும் பல முக்கிய நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டமை, புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டமை, சிறிமா-சாஸ்த்ரி உடன்படிக்கை, உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும்பொருட்டு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை மற்றும் தொழில் வாய்புகளை அதிகரிப்பதற்காக பல கைத்தொழில்கள் உருவாக்கப்பட்டமை போன்ற பல முற்போக்குத்திட்டங்கள் இவருடைய காலத்திலேயே இடம்பெற்றன. ஆனால் மக்கள் இவற்றையெல்லாம் வேறொரு கோணத்திலேயே நோக்கினர்

இந்த நிலையில் 1977 தேர்தலுக்கு முகம் கொடுத்த சிறிமாவோ அம்மையாருக்கு அது ஒரு பேரிடியாகவே அமைந்தது. 1958இல் எவ்வாறு பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டு அவரது முற்போக்குத் திட்டங்கள் முடக்கப்பட்தோ அவ்வாறே ஜே.ஆர். பிரதமரானதும் சிறிமாவோவின் குடியுரிமை உட்பட பல சலுகைகள் பறிக்கப்பட்டு அவர் மீண்டும் தலைதூக்காவண்ணம் ஏறக்குறைய ஒரு தசாப்தத்துக்கு முடக்கி வைக்கப்பட்டார்

1986இல் குடியுரிமையை மீளப் பெற்றதும்; 1989 தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவராகிய திருமதி பண்டாரநாயக்க, 1994இல் தனது மகள் சந்திரிகா குமாரதுங்கவின் ஜனாதிபதி ஆட்சியில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். இறுதியில் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சிறிமாவோ பண்டாரநாயக்க 2000ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் திகதி பொதுத்தேர்தல் ஒன்றில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில் மாரடைப்பால் உயிர் துறந்தார்.

அரசியல் எனும் பகடையாட்டத்துக்கு அன்று சிறிமாவோ அம்மையார் மறுப்பு தெரிவித்திருந்தால் பிரதமரின் இல்லத்தரசி, ஜனாதிபதியின் அன்னை என்றே அவர் நினைவு கூரப்பட்டிருப்பார். அவர் உலகின் முதல் பெண் பிரதமாக மட்டுமன்றி அணிசாரா நாடுகள் அமைப்பின் தலைவியாகவும் உயர்ந்தார்.

அரசியல் என்ற ஆணாதிக்க உலகினை வெற்றிகொண்டு இன்றளவும் உலக வரலாற்றில் நிலையான பெயரைக் கொண்டுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் வாழ்க்கை, அரசியலில் வெற்றிகொள்ள நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உந்துசக்தியாக அமையும் என்பதை யாரும் மறுக்க முடியாது.


  - முஹம்மத் றஸீன்

No comments:

Post a Comment