Saturday, July 11, 2020


மலாய் சமூகத்தில் உதித்த மாபெரும் தலைவர்

மலாய் சமூகத்தைச் சேர்ந்த துவான் புர்கானுத்தீன் ஜாயா, இலங்கையின் கண்டி மாவட்டத்தில் கலகெதரை என்ற ஊரில் 1880 ஜனவரி முதலாம் திகதி பிறந்தார். குருநாகல எங்லோ வெர்னாகியுலர் பாடசாலை, கண்டி சென் போல்ஸ் கல்லூரி, கல்கிஸ்ஸ சென் தோமஸ் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். 10 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஜாயா கல்வியில் காட்டிய திறமை காரணமாக முதலாம் தரத்திலிருந்து 4ஆம் தரத்திற்கும் பின்னர் 4ஆம் தரத்திலிருந்து 6ஆம் தரத்திற்கும் வகுப்பேற்றப்பட்டார்.

1913 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக் கழகப் பட்டதாரியாக கண்டி தர்மராஜா கல்லூரி, மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றியதன்பின் சட்டக் கல்லூரியில் இணைந்தார். அவர் அங்கு இறுதி ஆண்டில் கல்வி பயிலும்போது மருதானைப் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவரும் பிரபல கொடை வள்ளலுமான என்.டீ.எச். அப்துல் கபூரின் வேண்டுகோளைத் தட்ட முடியாது வழக்கறிஞராகவேண்டும் என்ற ஆசையைப் புறந்தள்ளி 1921 ஆம் ஆண்டில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதிபர் பதவியில் அமர்ந்தார்.

இவரது காலத்தில் இக்கல்லூரி கல்வியில் மட்டுமன்றி விளையாட்டு, இலக்கியம், போன்ற பல்வேறு துறைகளிலும் பெரும் வளர்ச்சி கண்டது. 59 மாணவர்களுடனும் 6 ஆசிரியர்களுடனும்  அக்கல்லூரியைப் பொறுப்பேற்ற ஜாயா அவர்கள் 27 வருடங்கள் சேவையாற்றிய பின் 3500 மாணவர்களுடனும் 150 ஆசிரியர்களுடனும் .எம்.. அஸீஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். ஜாயாவின் காலம் ஸாஹிராவின் பொற்காலம் எனலாம்.

இவரது காலத்தில் கல்லூரியின் கிளைகள் மாத்தளை, அளுத்கமை, புத்தளம், கம்பளை ஆகிய நகரங்களில் நிறுவப்பட்டது. பின்னர் இவை தனித்தனிப் பாடசாலைகளாக மாறி அந்நதந்த நகரங்களின் பிரபல பாடசாலைகளாக உருவெடுத்தன. ஜாயா அவர்களின் மாணவரான கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் நாட்டின் கல்வி அமைச்சரானதும் முஸ்லிம் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட்டதோடு புதிய பல பாடசாலைகளும் தோன்றின.

ஜாயா அவர்கள் 1924 ஆம் ஆண்டில் முஸ்லிம் உறுப்பினராக இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தீவிர அரசியலில் கால் பதித்தார். 1931 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் கொழும்பு மத்தியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் 1936 இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் நியமன அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1947 ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரான ஜாயா அவர்கள்  1947 இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதியில்; .தே,. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரே சுதந்திர இலங்கையின் முதல் முஸ்லிம் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.

1947இல் கம்பளையில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்தபோது ஜாயா அவர்கள் தனது சமூகசேவை அமைச்சின் மூலமாக கம்பளை, மரியாவத்தை என்ற இடத்தில் ஒரு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படுவதற்கு வழி வகுத்தார். அன்றைய கால கட்டத்தில் அது ஒரு மாபெரும் வீடமைப்புத் திட்டமாகக் கருதப்பட்டது. இன்று அது நகரை அண்மியதாக, வளர்சியடைந்த பெருங் கிராமாகக் காணப்படுகிறது. இதனைப் பெரும்பாலான கம்பளைவாசிகளே அறிந்திருக்கமாட்டார்கள். இது அக்கால அரசியவாதிகள் இக்கால அரசியல்வாதிகளைப்போல விளம்பரத்துக்காக சேவையாற்றவில்லை என்பதையே காட்டுகிறது.  

அன்று இரண்டாம் உலகயுத்தத்தினை வெற்றி கொள்ளும் நோக்கில் பிரித்தானியர்கள் ஒரு வியூகத்தை வகுத்தார்கள். அவர்களது காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகள் யுத்தத்தில் பிரித்தானியர்களுக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அந்நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதாக அறிவித்திருந்தார்கள். அதே போல் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்தை வழங்குவதற்கான ஒரு தகுதியாக, சிறுபான்மையினர் பாதிக்கப்படாதிருக்க 3/4 இற்கு அதிகமான பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை விடுத்தனர். ஆனால் இலங்கையின் பெரும்பான்மையான பௌத்த சிங்களவர்களால் தனித்து இந்த பெரும்பான்மையைக் காண்பிக்க முடியாதிருந்தது. அந்த காலகட்டத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் சட்டசபையில் 50:50 என்ற நிபந்தனையோடு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்க நிபந்தனை விதித்தார்.

இது பற்றி டீ.பி.ஜாயா அவர்கள் ஆற்றிய உரையில் 'நான் இங்கு சிறுபான்மை சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றியோ அல்லது பெரும்பான்மை இனத்தின் வெற்றி பற்றியோ கூற முன்வரவில்லை. இச்சபையிலுள்ள முஸ்லிம் அங்கத்தவர்கள் மசோதாவை ஆதரிப்பதற்கான ஒரே காரணத்தைக்கூற விரும்புகின்றேன். இந்த நாடு சுதந்திரமடைவதற்காக எமது சமூகத்திற்குக் கிடைக்கவிருக்கும் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் நாம் தியாகம் செய்யத் தயாராயுள்ளோம். நான் இதனை முழு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன் அவர்கள் சார்பாகக் கூறுகின்றேன்.' என்றார்.
பின்பு இதனையே சேர் ராசிக் பரீதும் ஆதரித்து உரையாற்றினார். இவ்வுரை பலரின் பாராட்டைப் பெற்றதோடு டெமீனியன் மசோதா நிறைவேற்றப்பட்டு நாடு சுதந்திரம் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. இதன் காரணமாக அவர் தேசிய வீரராக அங்கீகரிக்கப்பட்டு அவர் பெயரில் முத்திரையொன்றும் வெளியிடப்பட்டதோடு பாடப் புத்தகங்களிலும் அவர் பற்றிய விபரங்கள் இணைக்கப்பட்டன.

அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பல உயர் பதவிகளை வகித்ததோடு பாராளுமன்றத்தில் அவருடன் சமமாக அமரும் பாக்கியத்தையும் பெற்றனர். அவர்களுள் ஆனந்தா கல்லூரியில் கற்ற இன்றைய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தந்தையான 'மார்க்சிஸத் தந்தை' என அழைக்கப்பட்ட பிலிப் குணவர்தன, ரொபர்ட் குணவர்தன, என்.எம். பெரேரா என்போரும் அடங்குவர்.

ஒருமுறை பிலிப் குணவர்தனவின் குறும்புகளை சகிக்க முடியாத அன்றைய அதிபர் பீ.டீ.எஸ். குலரட்ன அவரைப் பாடசாலையைவிட்டு விலக்குவதற்குத் தீர்மானித்தார். அவரது ஆசிரியரான டீ,பி. ஜாயாவை அழைத்து 'இந்தப் பையனை இனியும் இப்பாடசாலையில் வைத்திருக்க முடியாது' என்று கோபத்துடன் கூறினார். அதற்கு ஜாயா  அமைதியாக 'சேர் இவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் மீண்டும் இவர் ஏதாவது பிரச்சினை ஏற்படுத்தினால் இவரைப் பாடசாலையைவிட்டு நீக்குவது மட்டுமல்ல நானும் இந்தத் தொழிலை விட்டு வேறொரு தொழிலைத் தேடிக்கொள்கிறேன்' என்றார். ஜாயாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மீண்டும் சேர்த்துகொள்ளப்பட்டார். பின்னர் அவர் படித்துப் பட்டம் பெற்று நாட்டுக்கும் கல்லூரிக்கும் பேரும் புகழும் தேடிக் கொடுத்தமை அனைவரும் அறிந்த விடயம்.

1950இல் டீ.பி. ஜாயா அவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகராக சென்றார். பாகிஸ்தானின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு ஜாயா அளித்த பங்களிப்புக்காக அவருக்கு 'கௌரவப் பிரஜை' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதோடு பஞ்சாப் பல்கலைக் கழகம் அவருக்கு கலாநிதிப் பட்டமளித்துக் கௌரவித்தது. இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் யாத்ரீகர்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு சவுதி அரேபியாவில் சிலோன் ஹவுஸ் என்ற ஒரு விடுதியை அமைப்பதிலும் அவர் வெற்றி கண்டார்.

1960 மே மாதம் 31ஆம் திகதி  மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போது மதீனாவில் காலமாகி ஜென்னத்துல் பக்கியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

- முஹம்மத் றஸீன்













No comments:

Post a Comment