Sunday, September 15, 2024


ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியும் மாற்றுக் கட்சிகளும்

 


பெரும்பான்மை சிங்கள வாக்குகளால் மட்டுமன்றி சிறுபான்மையினரான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும்   வாக்குகளினாலும் தமது வெற்றி நிர்ணயிக்கப்படுமானல் அந்த வெற்றி  முழுமை பெறும் என்ற அநுர குமார திஸாநாயக்க அவர்களின்  அண்மைக்கால அரைகூவல்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினரின் மனங்களில் ஒரு உத்வேகத்தை ஏறபடுத்தியுள்ளது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கடந்த கால கசப்பான அனுபவங்களால் விரக்தியடைந்துள்ள சிறுபான்மையினர் குறிப்பாக  முஸ்லிம் வாக்காளர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அணிதிரண்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இதனால் மிரண்டுபோயுள்ள மாற்றுக் கட்சியினர் தாம் இதுவரை அனுபவித்து வந்த சுகபோகங்களையும் அதிகார பலத்தையும் இழந்து வெற்று மனிதர்களாக வாழவேண்டிவரும் என்ற ஆதங்கத்தினாலும் தாம் இதுவரை கொள்ளையடித்த சொத்துகளுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அச்சத்தினாலும் அவர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பியும் விஷமப் பிரசாரங்களை மேற்கொண்டும் மக்களிடையே  விஷக் கருத்துகளை விதைத்து ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தி அதனைத் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முனைந்துள்ளனர்.


 ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்திற்கு எதிராக நிறுத்துவது, இன மோதல்களைத் தோற்றுவித்து வெறுப்புணர்வைத் தூண்டுவது,  ஆகியவற்றில் இந்தப் பிற்போக்கு வலதுசாரிக் கட்சிகள் கில்லாடிகள் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. இருந்தாலும், இந்தப் பூச்சாண்டிக் கதைகளையெல்லாம் நம்பியகாலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் அவர்களுக்கு உணர்த்தி வருவதையே நாம் காண்கிறோம்.


எனவே கொஞ்சம் கண் அசந்தாலும் கடந்த காலங்களில் நாட்டின் வளங்களை சூறையாடி உண்டு கொழுத்த பெருச்சாலிகள்  தமக்கு முடியுமான வழிகளில் தனது நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்து முன்னெடுக்கவே முயற்சிக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக, மக்கள் தீர்ப்பைப் புறந்தள்ளி மதநல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பலவீனப்படுத்த முயற்சிப்பதோடு, இந்நாட்டு,  பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் நலன் காக்கும் பாதையிலேதான் அவை தொடர்ந்தும் பயணிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  பல்வேறு சமூகங்களுக்கு இடையில் உள்ள சமச்சீரற்ற உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அறிவுசார்ந்த தீர்வுகளை முன்வைத்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலமே பிரித்தாளும் இந்த பிற்போக்குவாதிகளின் தந்திரத்தை நம்மால் முறியடிக்க இயலும் என்பதையும் உண்மைப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தவிர்ப்பதால் அது சாத்தியமில்லை என்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.


எனவே நமது போராட்டக்களம் இதனுடன் சுருங்கி நின்று விட முடியாது. எனவே இவர்களது ஊழல் மலிந்த  மக்கள் விரோத கொள்கைகளைத் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய பெரும் பணி தேசிய மக்கள் சக்தியின் முன் உள்ளது.   எனவே வர்க்க வெகுஜன போராட்டங்களை விரிவுபடுத்தி, அவற்றின் அரசியல் புரிதலை வலுப்படுத்தி,  ஜனநாயக சக்திகளை முன்னேற்றுவது தேசிய மக்கள் சக்தியின் முன் உள்ள மாபெரும் அரசியல் கடமையாகும். 

தவறினால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்திலேறிய கதைதான்!

.

Sunday, September 1, 2024


 

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம்


அநுரகுமார திஸாநாயக்கவினதும் அவரது தேசிய மக்கள் சக்தியினதும் அண்மைக் காலத் திடீர் எழுச்சியால் கலவரமடைந்த மாற்றுக் கட்சியினர் பலர் அவர்களது கடந்த காலக் குப்பைகளைக் கிளரி இரை மீட்கத் தொடங்கியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் ஜே.ஆர் ஜயவர்தன 1977இல் ஆரம்பித்து வைத்த 'பீஷன யுகய' எனப்படும் சாபத்திற்குரிய 17 வருடகால அராஜக ஆட்சி, அதனைத் தொடர்ந்து ராஜபக்ஷக்களின் ஊழல் மலிந்த இனவாத ஆட்சி மற்றும் திருடர்களைப் பிடிக்க வந்த நல்லாட்சி நாயகர்களின் மாபெரும் வங்கிக் கொள்ளை, ஈஸ்டர் படுகொலை, அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டமை போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் அது ஒன்றும் அந்த அளவு மோசமானதொன்றல்ல என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

  

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த ஜனாதிபதித் தேர்தல் பலவகையில் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் முதன்முறையாக தமது பாரம்பரிய வலதுசாரி யு.என்.பி மனப்பாங்கிலிருந்து விடுபட்டு குறிப்பாக இளைஞர் அணியொன்று  வேறொரு தெரிவு இல்லாத நிலையில், மாற்றத்தை வேண்டி மூன்றாவது அணியான தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்து பரந்த அளவில் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டும் கூட்டங்களை ஏற்பாடு செய்தும் ஆதரவளித்து வருகின்றமையைக் காணமுடிகிறது. இது 'எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதீர்கள்'  என்ற கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களது அறிவுரையை நினைவூட்டுகிறது. 

அண்மைக் காலங்களில் இனமுரண்பாட்டுக் கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. அவர்கள் அனுபவித்த இன்னல்கள், இழந்த சொத்துக்கள், தம்மால் தெரிவு செய்யப்பட்ட  அரசியல்வாதிகளால் அவர்கள் அடைந்த அவமானங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் மற்றும் ஏமாற்றங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட விரக்தி நிலையே இந்த முடிவுக்கு அவர்களை உந்தித் தள்ளியுள்ளது என ஊகிக்கலாம். ஊடகவியலாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும் இதற்கு பல விளக்கங்களை அளிக்கலாம். மக்கள் இயக்கங்களும் தனிப்பட்டவர்களும்கூட ஆரூடங்களில் இறங்கி விவாதிக்கலாம் ஆனால் அவர்களது முடிவு சரியானதா தவறானதா என்ற விவாதம் இங்கு அவசியமற்றது, இது அவர்கள் சுயமாக சிந்தித்து நாட்டினதும் சமூகத்தினதும் நலன் கருதி எடுத்த நல்ல முடிவு என்றே தோன்றுகிறது. முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தப்பாரிய மனமாற்றத்தைப் பார்க்கும்போது  அவர்களது வாக்குகள் ஒரு வேளை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வாக்காகவும் அமையலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ஜே.வீ.பீ.யின் மறக்க முடியாத  கடந்த கால கசப்பான  வரலாற்றை யாரும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும், தமது எல்லாவகையான திருட்டுத் தனங்களையும் கொடூரமான இன வன்முறைகளையும் படுகொலைகளையும் முடிமறைத்து  மீண்டும் புதிய முகமூடிகளுடன் வாக்குப் பிச்சை கேட்டு மக்கள் முன் வந்திருக்கும் பாதாளக் கோஷ்டியினரின் அணுசரனையுடன் ஆட்சி புரிந்த பழைய கேடிகளுடன்  ஒப்பிடுகையில் நடுநிலையில் சுயமாக சிந்திக்கும் ஒருவர் வேறு வழியின்றி Best among the worst என்ற அடிப்படையில் அவர்களைத் தெரிவு செய்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப்போக்கு இதுவரை நிலவிவந்த முறைமையை மக்கள் வீழ்ச்சியடைய செய்திருக்கிறார்கள் என்பதையும் கணிசமான மக்கள் அந்தக் கொள்கைகளை நிராகரித்துள்ளனர் என்பதையுமே தெளிவாக்குகிறது.


தேசிய மக்கள் சக்தியைத் தவிர இத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் ஒரே கருவறையில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள் என்பதை அனைவரும் அறிவர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்தொட்டு அவர்களது கட்சித் தாவல்கள் அதனையே எடுத்துக் காட்டுகின்றது. எனவே  அவர்களது நிகழ்ச்சி நிரல் என்பது  ராஜபக்ஷ குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலான அதே ஊழல்கள் நிறைந்த இனவாத இலக்குதான் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் ஆட்சி அதிகாரம் மீண்டும் அவர்கள் கையில் சிக்குமானால், மதசுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, ஜனநாயகம் உள்ளிட்ட நமது நாடு எதிர்காலத்தில் கட்டியெலுப்ப வேண்டிய சிறந்த கோட்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் மேலும் முனைப்புடன் செயல்படுவர் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதேபோன்று அடித்தட்டு வர்க்கங்களின் நலன்களைக் காவு கொடுத்து, மேலும் மேலும் முதலாளித்துவ வர்க்கங்களின் நலனுக்கான பொருளாதாரத்தை முன்னெடுக்க, முன்பைவிட முனைப்பாக முயற்சிப்பர். எனவே அதனைத் தடுக்கும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை வலுப்படுத்துவதும், மக்கள் இயக்கங்களை தீவிரப்படுத்துவதும்,  மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து, போராட்டங்களை முன்னெடுப்பதும் இன்றைய அவசர கடமைகளாக உள்ளன. எதிர்ப்புணர்வு என்பதுடன் மக்களின் அரசியல் புரிதல் நின்றுவிடக் கூடாது. முன்னைய அரசாங்கங்களினால் பின்பற்றப்பட்டு வந்த பிற்போக்கு சித்தாந்தங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும். இந்தத் தேர்தலோடு இந்தக் கொள்கைக்கு எதிரான போராட்டம் முடிவடைந்து விடப்போவதில்லை. வலதுசாரி பிற்போக்கு கருத்தியலுக்கு எதிரான போராட்டம் தொடரவே செய்யும்.

முஹம்மத் றஸீன்

Wednesday, July 31, 2024

 பழையன கழிதலும் புதியன புகுதலும்

- முஹம்மத் றஸீன்

இலங்கையில் இப்போதெல்லாம் தேர்தல் ஜூரம் கொவிட்டைவிட வேகமாகப்பரவிவருவதைக் காண முடிகிறது. தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்று கணிப்பீடு செய்வதில் வாக்காளர்களைவிட அரசியல்வாதிகளே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்சி கொள்கைகள் எல்லாவற்றையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு எந்தப்பக்கம் தாவினால் தாம் எதிர்பார்த்திருக்கும் பதவியைப் பெறலாம் என்பதில் அரசியல்வாதிகள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இதற்கிடையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட பின்பும் தனது பதவியை நீட்டிக்கவும் தேர்தலைத் தள்ளிப் போடவும பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருவதையும் காண முடிகிறது. ஒருபுறம் பொய்களும் புரட்டுகளும் வதந்திகளும் கபடநாடகங்களும் அரங்கேறிக்கொண்டிருக்க மறுபுறம் அரசியல் ஆரூடங்களும் வீராப்புப் பேச்சுகளும் விஷமப் பிரசாரங்களும் பெரும் பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணிகளிலும் அவர்களது பிரசாரக் கூட்டங்களிலும் ஒருபோதுமில்லாத வகையில் இன, மத, மொழி கடந்த மாபெரும் மக்கள் பங்கேற்பினைக் கண்டு கதி கலங்கிப் போயுள்ள ஏனைய கட்சிகள் தேசிய மக்கள் சக்தியைத் தமது பொது எதிரியாகக் கருதி நிலையான கூட்டணிகளை உருவாக்கி அதன் முன்னேற்றத்தைத் தடுக்கும் உத்திகளை ஆராய்கின்றன.   

அரசியலில் தனிக்காட்டு ராஜாவாக இதுவரை கோலோச்சிவந்த முக்கிய புள்ளிகள்  தமது எதிர்காலம் என்னாகுமோ என்ற அச்சத்தில் எந்தப்பக்கம் தாவினால் தப்பலாம் எனப் புலிகளைப்போலப் பதுங்கிப் பார்த்திருக்கின்றனர். இன்னும் சிலர் அசட்டுத் துணிச்சலுடன் வருவது வரட்டும் என வாய்ச்சவடால் விட்டும் வாய்கிழியக் கர்ஜித்துக்கொண்டும் திரிகின்றனர். எவ்வாறாயினும் இதுவரை அடங்காப்பிடாரியாக அதிகாரத்தைப் பற்றிப் பிடித்து நாட்டைச் சீரழித்து இழிநிலைக்குத் தள்ளிய ஒருசிலர் அரசியல் அஞ்ஞாத வாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பது மட்டும் உறுதி. அவர்களுள் ஒருசிலர் தேர்தலுக்கு முன்பே தலை தப்பினால் போதும் என நாட்டைவிட்டுத் தப்பியோடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சுதந்திரத்தின் பின்னரான நமது நாட்டுப் பொருளாதாரம் தாராளமயப் பாதையில் ஆரம்பித்து இடையில் சிலகாலம் சோஸலிஸப் பாதையில் பயணித்து 1977க்குப்பின் அதிதீவிர தாராளமய காப்ரேட் ஆதரவுக் கொள்கைகள் அடங்கிய ஒரு திறந்த பொருளாதாரத்துக்குள் பிரவேசித்தது. தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய இப்பாதை இலங்கை வரலாற்றில் இதுவரை யாருமே கண்டிராத அடக்குமுறைகளும் அராஜகங்களும் அட்டூழியங்களும் இனவன்முறைகளும் தலைவிரித்தாடி  இந்நாட்டு அரசியல் வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது. இவ்வாறு  1977 முதல் ஜே.ஆர். ஜெயவர்தன பின்பற்றிய மெக்கியாவலி சித்தாந்தங்கள் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் நாட்டின் தொழிலாளர் வர்க்கமும் சிறு தொழில் முனைவோரும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதோடு பின்னாட்களில் பாதாள உலகக் கோஷ்டியினரும் ஊழல் பேர்வழிகளும் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கவும் அவர்களது ஆதிக்கம் மேலோங்கவும் வழி வகுத்தது. எனவே மாமனார் ஜே.ஆர். முதல்  மருமகன் ரணில் வரையிலான ஆட்சி காலத்தில் அராஜகமும் இன வன்முறைகளும் வளர்ந்த அளவுக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, வறுமை ஒழிப்பு, மக்கள் வாழ்க்கைத்தர மேம்பாடு ஆகிய முக்கிய அம்சங்களில் வளர்ச்சி ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே எதிர்வரும் தேர்தலில் பழைய முகங்களை நிராகரித்து நாம் அனைவரும் விரும்பும் மாற்றமொன்று நிகழ்ந்து இன்றைய அரசியல் நாடகத்தில் ஒரு புது முகம் அறிமுகமானாலும் இதுவரை புரையோடிப்போயுள்ள மேசமான மதவெறி அரசியல் விளைவுகளை முற்றாகத் துடைத்தெறியப் போராடவேண்டியிருக்கும் அதேசமயம் அரசின் அதிதீவிர தாராளமய காப்ரேட் ஆதரவுக் கொள்கையை நிராகரித்து உழைக்கும் வர்க்கத்திற்கும் நாட்டு வளர்ச்சிக்கும் அத்தியவசிய மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பெரும் சவாலையும் அவர் எதிர்கொள்ள நேரிடும். அதேநேரம் அவர்களைக்கொண்டு அவற்றைச் செய்விக்கும் திறன் கட்சிகளாலும் கொள்கைகளாலும் பிளவுபட்டிருக்கும் நமக்கு, குறிப்பாக நமது இளைஞர் சமுதாயத்திற்கு இருக்குமா? அதற்கு நமது அரசியல் யாப்பு இடம் தருமா? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும் விரக்தியின் விளிம்பில் வாக்களிக்கச் செல்லும் பெரும்பாலானவர்கள் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து, வருவதை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டதாகவே தோன்றுகிறது.