Sunday, September 1, 2024


 

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம்


அநுரகுமார திஸாநாயக்கவினதும் அவரது தேசிய மக்கள் சக்தியினதும் அண்மைக் காலத் திடீர் எழுச்சியால் கலவரமடைந்த மாற்றுக் கட்சியினர் பலர் அவர்களது கடந்த காலக் குப்பைகளைக் கிளரி இரை மீட்கத் தொடங்கியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் ஜே.ஆர் ஜயவர்தன 1977இல் ஆரம்பித்து வைத்த 'பீஷன யுகய' எனப்படும் சாபத்திற்குரிய 17 வருடகால அராஜக ஆட்சி, அதனைத் தொடர்ந்து ராஜபக்ஷக்களின் ஊழல் மலிந்த இனவாத ஆட்சி மற்றும் திருடர்களைப் பிடிக்க வந்த நல்லாட்சி நாயகர்களின் மாபெரும் வங்கிக் கொள்ளை, ஈஸ்டர் படுகொலை, அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டமை போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் அது ஒன்றும் அந்த அளவு மோசமானதொன்றல்ல என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

  

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த ஜனாதிபதித் தேர்தல் பலவகையில் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் முதன்முறையாக தமது பாரம்பரிய வலதுசாரி யு.என்.பி மனப்பாங்கிலிருந்து விடுபட்டு குறிப்பாக இளைஞர் அணியொன்று  வேறொரு தெரிவு இல்லாத நிலையில், மாற்றத்தை வேண்டி மூன்றாவது அணியான தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்து பரந்த அளவில் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டும் கூட்டங்களை ஏற்பாடு செய்தும் ஆதரவளித்து வருகின்றமையைக் காணமுடிகிறது. இது 'எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதீர்கள்'  என்ற கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களது அறிவுரையை நினைவூட்டுகிறது. 

அண்மைக் காலங்களில் இனமுரண்பாட்டுக் கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. அவர்கள் அனுபவித்த இன்னல்கள், இழந்த சொத்துக்கள், தம்மால் தெரிவு செய்யப்பட்ட  அரசியல்வாதிகளால் அவர்கள் அடைந்த அவமானங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் மற்றும் ஏமாற்றங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட விரக்தி நிலையே இந்த முடிவுக்கு அவர்களை உந்தித் தள்ளியுள்ளது என ஊகிக்கலாம். ஊடகவியலாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும் இதற்கு பல விளக்கங்களை அளிக்கலாம். மக்கள் இயக்கங்களும் தனிப்பட்டவர்களும்கூட ஆரூடங்களில் இறங்கி விவாதிக்கலாம் ஆனால் அவர்களது முடிவு சரியானதா தவறானதா என்ற விவாதம் இங்கு அவசியமற்றது, இது அவர்கள் சுயமாக சிந்தித்து நாட்டினதும் சமூகத்தினதும் நலன் கருதி எடுத்த நல்ல முடிவு என்றே தோன்றுகிறது. முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தப்பாரிய மனமாற்றத்தைப் பார்க்கும்போது  அவர்களது வாக்குகள் ஒரு வேளை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வாக்காகவும் அமையலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ஜே.வீ.பீ.யின் மறக்க முடியாத  கடந்த கால கசப்பான  வரலாற்றை யாரும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும், தமது எல்லாவகையான திருட்டுத் தனங்களையும் கொடூரமான இன வன்முறைகளையும் படுகொலைகளையும் முடிமறைத்து  மீண்டும் புதிய முகமூடிகளுடன் வாக்குப் பிச்சை கேட்டு மக்கள் முன் வந்திருக்கும் பாதாளக் கோஷ்டியினரின் அணுசரனையுடன் ஆட்சி புரிந்த பழைய கேடிகளுடன்  ஒப்பிடுகையில் நடுநிலையில் சுயமாக சிந்திக்கும் ஒருவர் வேறு வழியின்றி Best among the worst என்ற அடிப்படையில் அவர்களைத் தெரிவு செய்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப்போக்கு இதுவரை நிலவிவந்த முறைமையை மக்கள் வீழ்ச்சியடைய செய்திருக்கிறார்கள் என்பதையும் கணிசமான மக்கள் அந்தக் கொள்கைகளை நிராகரித்துள்ளனர் என்பதையுமே தெளிவாக்குகிறது.


தேசிய மக்கள் சக்தியைத் தவிர இத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் ஒரே கருவறையில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள் என்பதை அனைவரும் அறிவர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்தொட்டு அவர்களது கட்சித் தாவல்கள் அதனையே எடுத்துக் காட்டுகின்றது. எனவே  அவர்களது நிகழ்ச்சி நிரல் என்பது  ராஜபக்ஷ குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலான அதே ஊழல்கள் நிறைந்த இனவாத இலக்குதான் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் ஆட்சி அதிகாரம் மீண்டும் அவர்கள் கையில் சிக்குமானால், மதசுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, ஜனநாயகம் உள்ளிட்ட நமது நாடு எதிர்காலத்தில் கட்டியெலுப்ப வேண்டிய சிறந்த கோட்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் மேலும் முனைப்புடன் செயல்படுவர் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதேபோன்று அடித்தட்டு வர்க்கங்களின் நலன்களைக் காவு கொடுத்து, மேலும் மேலும் முதலாளித்துவ வர்க்கங்களின் நலனுக்கான பொருளாதாரத்தை முன்னெடுக்க, முன்பைவிட முனைப்பாக முயற்சிப்பர். எனவே அதனைத் தடுக்கும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை வலுப்படுத்துவதும், மக்கள் இயக்கங்களை தீவிரப்படுத்துவதும்,  மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து, போராட்டங்களை முன்னெடுப்பதும் இன்றைய அவசர கடமைகளாக உள்ளன. எதிர்ப்புணர்வு என்பதுடன் மக்களின் அரசியல் புரிதல் நின்றுவிடக் கூடாது. முன்னைய அரசாங்கங்களினால் பின்பற்றப்பட்டு வந்த பிற்போக்கு சித்தாந்தங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும். இந்தத் தேர்தலோடு இந்தக் கொள்கைக்கு எதிரான போராட்டம் முடிவடைந்து விடப்போவதில்லை. வலதுசாரி பிற்போக்கு கருத்தியலுக்கு எதிரான போராட்டம் தொடரவே செய்யும்.

முஹம்மத் றஸீன்

No comments:

Post a Comment