Sunday, September 15, 2024


ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியும் மாற்றுக் கட்சிகளும்

 


பெரும்பான்மை சிங்கள வாக்குகளால் மட்டுமன்றி சிறுபான்மையினரான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும்   வாக்குகளினாலும் தமது வெற்றி நிர்ணயிக்கப்படுமானல் அந்த வெற்றி  முழுமை பெறும் என்ற அநுர குமார திஸாநாயக்க அவர்களின்  அண்மைக்கால அரைகூவல்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினரின் மனங்களில் ஒரு உத்வேகத்தை ஏறபடுத்தியுள்ளது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கடந்த கால கசப்பான அனுபவங்களால் விரக்தியடைந்துள்ள சிறுபான்மையினர் குறிப்பாக  முஸ்லிம் வாக்காளர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அணிதிரண்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இதனால் மிரண்டுபோயுள்ள மாற்றுக் கட்சியினர் தாம் இதுவரை அனுபவித்து வந்த சுகபோகங்களையும் அதிகார பலத்தையும் இழந்து வெற்று மனிதர்களாக வாழவேண்டிவரும் என்ற ஆதங்கத்தினாலும் தாம் இதுவரை கொள்ளையடித்த சொத்துகளுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அச்சத்தினாலும் அவர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பியும் விஷமப் பிரசாரங்களை மேற்கொண்டும் மக்களிடையே  விஷக் கருத்துகளை விதைத்து ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தி அதனைத் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முனைந்துள்ளனர்.


 ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்திற்கு எதிராக நிறுத்துவது, இன மோதல்களைத் தோற்றுவித்து வெறுப்புணர்வைத் தூண்டுவது,  ஆகியவற்றில் இந்தப் பிற்போக்கு வலதுசாரிக் கட்சிகள் கில்லாடிகள் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. இருந்தாலும், இந்தப் பூச்சாண்டிக் கதைகளையெல்லாம் நம்பியகாலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் அவர்களுக்கு உணர்த்தி வருவதையே நாம் காண்கிறோம்.


எனவே கொஞ்சம் கண் அசந்தாலும் கடந்த காலங்களில் நாட்டின் வளங்களை சூறையாடி உண்டு கொழுத்த பெருச்சாலிகள்  தமக்கு முடியுமான வழிகளில் தனது நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்து முன்னெடுக்கவே முயற்சிக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக, மக்கள் தீர்ப்பைப் புறந்தள்ளி மதநல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பலவீனப்படுத்த முயற்சிப்பதோடு, இந்நாட்டு,  பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் நலன் காக்கும் பாதையிலேதான் அவை தொடர்ந்தும் பயணிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  பல்வேறு சமூகங்களுக்கு இடையில் உள்ள சமச்சீரற்ற உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அறிவுசார்ந்த தீர்வுகளை முன்வைத்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலமே பிரித்தாளும் இந்த பிற்போக்குவாதிகளின் தந்திரத்தை நம்மால் முறியடிக்க இயலும் என்பதையும் உண்மைப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தவிர்ப்பதால் அது சாத்தியமில்லை என்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.


எனவே நமது போராட்டக்களம் இதனுடன் சுருங்கி நின்று விட முடியாது. எனவே இவர்களது ஊழல் மலிந்த  மக்கள் விரோத கொள்கைகளைத் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய பெரும் பணி தேசிய மக்கள் சக்தியின் முன் உள்ளது.   எனவே வர்க்க வெகுஜன போராட்டங்களை விரிவுபடுத்தி, அவற்றின் அரசியல் புரிதலை வலுப்படுத்தி,  ஜனநாயக சக்திகளை முன்னேற்றுவது தேசிய மக்கள் சக்தியின் முன் உள்ள மாபெரும் அரசியல் கடமையாகும். 

தவறினால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்திலேறிய கதைதான்!

.

No comments:

Post a Comment