Monday, June 29, 2020


மூன்றாவது பிரதமர்

இலங்கையின் மூன்றாவது பிரதமரான ஜோன் லயனல் கொத்தலாவல ஒரு வளமிக்க குடும்பத்தில் 1895 ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பிறந்தார். இலங்கை காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய அவரது தந்தை ஜோன் கொத்தலாவல, ஜோன் லயனல் கொத்தலாவல 11 வயதாக இருக்கும் போது ஒரு கொலைக் குற்றச்சாட்டை அடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது தாயார் தமது நிலங்களையும் காரீய சுரங்கங்களையும் முறையாக மேலாண்மை செய்ததன் மூலம் பெரும் சொத்துக்களை ஈட்டினார்

ஜோன் லயனல் கொத்தலாவலை கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். 1915 ஆம் ஆண்டில் விடுதலைக்கு ஆதரவான சில நடவடிக்கைகளில் பங்குபற்றி யமையால் பாடசாலையை விட்டு விலக நேரிட்டது. அதன் பின்னர் ஐரோப்பா சென்ற அவர் இங்கிலாந்திலும், பிரான்சிலும் ஐந்தாண்டுகள் வரை தங்கியிருந்தார். அக்காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிறைஸ்ட் சேர்ச் கல்லூரியில் வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றார். அவரது சமூக சேவைகளுக்காக அவருக்கு பிரித்தானிய அரசின் உயர் விருது கிடைத்தது. அதன்பின் அவர் சேர் ஜோன் கொத்தலாவல என அழைக்கப்பட்டார்.

இளம் வயதில் கிரிக்கட், குதிரையேற்றம் உட்படப் பலவித விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். சிங்களம், ஆங்கிலம், பிரான்சிய மொழிகளில் பெரும் புலமை பெற்றிருந்தார். இலங்கை திரும்பிய அவர் தமது குடும்பத்தின் தோட்டங்களையும் சுரங்கங்களையும் நிருவகித்து வந்ததோடு தீவிர அரசியலிலும் ஈடுபட்டார். 1937இல் அரசாங்க சபையில் போக்குவரத்து பொது வேலைகள் அமைச்சராக நியமனம் பெற்ற அவர் 1947 பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று அதே அமைச்சர் பதவியைப் பெற்றார். 

டீ.எஸ். சேனாநாயக்காவின் மரணத்தைத்தொடர்ந்து இலங்கையின் இரண்டாவது பிரதமராகும் வாய்பை எதிர்பார்த்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சேர் ஜோன் கொத்தலாவலை, அன்றைய ஆளுனர் நாயகம் அப்பதவிக்கு டட்லி சேனாநாயக்காவை  நியமித்ததன் காரணமாக அந்த வாய்பை இழந்தார். ஆனால் 1952இல் இடதுசாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தாலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் டட்லி சேனாநாயக்க பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக சேர் ஜோன் கொத்தலாவல இலங்கையின் மூன்றாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். 1956 தேர்தலில் அடைந்த படுதோல்வி காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி பல வருடங்களை இங்கிலாந்தில் கழித்தார். எவ்வாறாயினும், சில வருடங்களின் பின் ஆளுனர் நாயகத்தின் பதவிக் காலம் முடிவடையும் தறுவாயில் அப்பதவியைப் பெறும் எண்ணத்தோடு நாடு திரும்பினார். ஆனால் அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்க ஆளுனர் நாயகம் திரு. வில்லியம் கொபல்லாவையின் பதவிக் காலத்தை நீட்டித்ததால் அவரது ஆசை நிராசையாகியது.

இலங்கை இராணுவ சேவையில் ஒரு கர்ணலாக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல, மரணப் படுக்கையில் இருக்கும் தறுவாயில் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டார்.

1953ஆம் ஆண்டு நாம் சிறுவர்களாக இருந்தபோது கம்பளையில் எமது கிராமமான இல்லவத்துரையில் ஜமாஅத்துல் ஹிதாயா என்ற சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு இரவுப் பாடசாலையைத் திறந்து வைப்பதற்காக சேர் ஜோன் கொத்தலாவல வருகை தந்தார். அந்த வைபவத்தில் அவர் மிக மகிழ்ச்சியாக, எனது நண்பன் ஒருவனைத் தனது மடியில் இருத்தி , பி, ஸீ, டீ...என்ற ஆங்கில அரிச்சுவடியை சொல்லிக்கொடுத்து அப்பாடசாலையை ஆரம்பித்து வைத்த சம்பவம் எமதுள்ளங்களில் இன்றுவரை நீங்காத இடம் பெற்றுள்ளது.
அவர் பெரும் செல்வந்தராகவும் அரசியல் செல்வாக்கு உடையவராக இருந்தாலும் எளிமையாகவே வாழ்ந்தார். அவர் அரசியலில் சொத்து சேர்க்கவில்லை. மாறாக அவர் பிறவியிலேயே பெரும் செல்வந்தராக இருந்தார்.

அவர் சிறந்த பரோபகாரியகவும் நேர்மையான மனிதராகவும் இருந்தபோதிலும் அவரது முன்கோபம், அரசியலிலும் அரசாங்க விவகாரங்களிலும் அவரது விவேகமற்ற அவசர முடிவுகள், எந்த ஒரு சிக்கலான விடயத்தையும் ராஜதந்திர ரீதியில் அணுகாமல் நேரடியாகவே தீர்க்க முயன்றமை போன்றவை அவரை அரசியலில் முன்செல்ல விடாமல் தடுத்ததோடு அரசியல் எதிரிகளைத் தேடிக்கொள்வும் வழி வகுத்தது. அதற்கு அவர் கலந்துகொண்ட இந்தோனீஷிய பாந்துங் மாநாடு மற்றும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் அவரது நடவடிக்கைள் என்பன சிறந்த உதாரணங்களாகும்.

அவரது திருமண வாழ்வும் வெற்றிகரமாக அமையாது விவாகரத்தில் முடிந்தது. இறுதியில் 1980ஆம் ஆண்டு அக்டோர் இரண்டாம் திகதி அவர் உயிர் துறப்பதற்கு முன் பாதுகாப்புப் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்காக  தனது கந்தவெல வீட்டையும் 50 ஏக்கர் காணியையும் நன்கொடையாக வழங்கினார்.

பின்னர் அது 'ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக் கழகம்' என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இன்று அது ஒரு பூரணத்துவம் பெற்ற ஒரு பல்கலைக் கழகமாக இயங்கி வருகிறது. 1993இல் சேர். ஜோன் கொத்தலாவலை அருங்காட்சியகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

ஆக்கம்: முஹம்மத் றஸீன்



No comments:

Post a Comment