Thursday, June 25, 2020


குருவுக்கும் தவறு ஏற்படுவதுண்டு!

ஆக்கம்: முஹம்மத் றஸீன்

.எம்.ஆர்.. ஈரியகொல்ல அவர்கள் 1965இல் டட்லி சேனாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் கல்வி மற்றும் கலாசார விவகார அமைச்சராக நாட்டுக்கும் மக்களுக்கும் தன்னலமின்றி சேவை செய்வதற்காக தமது தனிப்பட்ட செல்வத்தையும் நேரத்தையும் சக்தியையும் செலவிட்ட ஒரு எளிமையான, நேர்மையான அரசியல்வாதியாகவே இனம் காணப்படுகிறார்.

ஒருமுறை கிராமப்புற பாடசாலை அதிபர் ஒருவர் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் அவர்களது தனிப்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக இடமாற்றம் செய்யப்படுகிறார். அந்த அதிபர் அன்றைய கல்வி அமைச்சர் ஈரியகொல்ல அவர்களிடம் முறையிட்டு நியாயம் கேட்கிறார். அமைச்சர் இதுபற்றி விசாரித்து அவரது பக்கம் நியாயம் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனால் அவர் விடுவதாக இல்லை. நான் எவ்வித குற்றமும் செய்யாதபோது அவர் என்னை எவ்வாறு இடமாற்றம் செய்யமுடியும்? எனக்கு உடனடியாக இந்த இடமாற்றம் இரத்து செய்யப்படவேண்டும் என அடம்பிடித்து நின்றார். ஆனால் அமைச்சர் அமைதியாக நான் உங்களுக்கு அநீதி இழைக்க இடம் தர மாட்டேன். ஆனால் இது விசாரித்து முடிவெடுக்க வேண்டிய விடயம் எனவும் பொருமையாக இருக்கும்படியும் வேண்டினார். அந்த அறிவுரையெல்லாம் அந்த அதிபரின் காதில் ஏறவில்லை. என்னால் இவ்விடயத்தில் பொருமையாக இருக்க முடியாது. எனக்கு உடனடியாக இதற்கொரு தீர்வு வேண்டும் என ஆத்திரத்துடன் கூறினார்.
அப்படியானால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது என அமைச்சர் மறுத்துவிட்டார். பொருமையிழந்த அதிபர் 'அமைச்சர் அவர்களே! இதோ பாருங்கள்! நீங்கள் இன்னும் சில காலம்தான் அமைச்சராக இருக்கமுடியும். அதன் பிறகு நீங்கள் சாதாரண மிஸ்டர் ஈரியகொல்லதான் ஆனால் நான் அப்படியல்ல, இறந்த பின்பும்கூட நான் 'லொக்கு இஸ்கோல மஹத்தையா'தான் (அதிபர்)' எனக் கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றார். அமைச்சர் புன்னகையுடன் தனது அன்றாட அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தார்.

இது நடந்து பல வருடங்கள் கடந்தன. ஒரு நாள் ஒரு பிரமுகரின் மரண ஊர்வலத்தில் ஈரியகொல்ல அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார். அவர் மிக உயரமாக இருந்ததால் எந்த சனக் கூட்டத்திலும் அவரை யாரும் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். பின்னாலிருந்து ஒருவர் அவரது முதுகைத் தட்டி 'ஹலோ மிஸ்டர் ஈரியகொல்ல' என்று அழைத்தார். திரும்பிப்பார்த்த ஈரியகொல்ல அவர்கள் 'அனே மே அப்பே லொக்கு இஸ்கோல மஹத்தையா னே' (அடடா இது எங்கள் அதிபர் அல்லவா) என்றார் புன்னகையுடன். பின்னர் அவர் சமாளித்துக்கொண்டு என்னை மன்னிக்கவேண்டும் 'குரரட்டத் வரதினவானே சேர்' (குருவுக்கும் தவறு ஏற்படலாம்தானே) என்றார். ஈரியகொல்ல அவர்கள் அதே புன்னகையுடன் அவரை அரவணைத்தவண்ணம் விடை கொடுத்தார். இது அவரது பொருமைக்கும் நேர்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

சிங்களம் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றிருந்த ஈரியகொல்ல அவர்கள் ஒரு இலக்கியவாதியாகவும் பத்திகையாளராகவும் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நேர்மையான அரசியல்வாதியாகவும் விளங்கினார். அவர் விக்டர் ஹியூகோவின் 'லா மிஸரேப்' என்ற புகழ் பெற்ற நாவலைமனுதாபய” என்ற தலைப்பில் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். இதைவிட அவர் பல சிறு கதைகளையும் கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

அவர் மேற்கொண்ட சீர்திருத்தங் களை, குறிப்பாக அவரது கல்விக் கொள்கைகளையும் வெளிப்படையான கருத்துகளையும் சமூகத்தின் செல்வாக்குமிக்க ஒரு குழுவிரால் சீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவை கடும் விமரிசனத்துக்குள்ளாகியது. இதுவே 1970 தேர்தலில் அவரது வீழ்ச்சிக்கும் அரசியல் அஞ்ஞாதவாசத்திற்கும் காரணமாகியது.  எவ்வாறாயினும்ஒரு சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்கும் வேகத்துடனும் அதிகாரத்துடனும் செயற்படுத்துவதற்கான அவரது அபார திறமையும் இந்த நாட்டில் இதுவரை இல்லாத சிறந்த கல்வி அமைச்சர்களுள் ஒருவராக அவரை ஆக்கியது. இந்த அருங் குணங்கள் இன்றைய அரசியல்வாதிகளிடம் காணப்படாமை நமது துரதிஷ்டமே.


அவ்வாறான ஒருவரின் கையால் எனது ஆசிரிய நியமனத்தைப் பெறும் பாக்கியத்தைப் நான் பெற்றேன். அன்றைய வைபவத்தில் அவர் இயற்றிய பல தேசபக்திப் பாடல்களை நாம் ஒன்றாக சேர்ந்து பாடி மகிழ்ந்தோம். அவற்றுள் இன்னும் என் மனதில் மறையாத இடத்தைப் பெற்றது, 'லோக்கென் உத்தும் ரட்ட லங்காவய்....' என்ற அருமையான பாடலாகும்.


No comments:

Post a Comment