Friday, June 19, 2020



இப்படியும் அரசியல்வாதிகள்!

ஆக்கம்: முஹம்மத் றஸீன்

இன்று நாட்டின் அரசியல் அரங்கில் செயல்படும் அரசியல்வாதிகளது அரசியல் கலாசாரமற்ற, தான்தோன்றித்தனமான, பண்பாடற்ற செயற்பாடுகளை அவதானிக்கும்போது இற்றைக்கு ஐந்து தசாப்தங்களுக்கு முன் இலங்கை அரசியல் வானில் ஜொலித்த அரசியல்வாதிகளது தன்னலமற்ற அர்ப்பணிப்புடனான சேவைகள் குறித்து நாம் வியப்படையாமல் இருக்க முடியாது.

இலங்கை அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க நேர்ந்ததால் கண்டி கச்சேரியில் எழுதுவினைஞர் சேவையில் பணியாற்றிய ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். அக்காலத்தில் கண்டி அரசாங்க அதிபராகக் கடமை யாற்றிய சேர் கந்தையா வைத்தியநாதன் பதவி நீக்கக் கடிதத்தை உரியவரிடம் கையளித்துத் தனது அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.


காலம் வேகமாக சுழன்றது. சேர். கந்தையா வைத்தியநாதன், அவரால் பதவிநீக்கம் செய்யப்பட்டவர், இருவரும் 1952 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றனர். முன்னையவர் அரச வீடமைப்பு சமூகசேவை அமைச்சரானார். பின்னையவர் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். நான்கு ஆண்டுகள் கழிந்தன, 1956இல் தேர்தல் வந்தது, அரசாங்கம் கைமாறியது. எஸ்.டப்லியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான அமைச்சரவையில், சேர். கந்தையா வைத்தியநாதன் வகித்த, அதே அரச வீடமைப்பு சமூகசேவை அமைச்சு அவரால் பதவிநீக்கம் செய்யப்பட்ட அந்த எழுதுவினைஞர் வசமானது.

பின்னாட்களில் அரசியல் வானில் கொடி கட்டிப் பறந்த டீ.பி. இலங்கரட்ன என்பவரே அந்த இளம் எழுதுவினைஞர்! இது போன்ற மற்றுமொரு புதுமையான சம்பவத்தையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாக அமையும். டீ.பி. இலங்கரட்ன கண்டி கச்சேரியில் பணியாற்றிய காலத்தில் அவரது மேலதிகாரியாக, அரசாங்க அதிபர் மொனிபெனி என்பவர் கமையாற்றினார். இதில் வியப்புக்குரிய விடயம் என்னவென்றால், பின்னொரு காலத்தில் டீ.பி. இலங்கரட்ன உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்தபோது அதே மொனிபெனி அவரது நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டமையாகும். இவ்வாறான சுவாரஸ்யமான பல சம்பவங்கள் அவரது அரசியல் வாழ்வில் நிறையவே நிகழ்ந்துள்ளன.
அத்துடன் பாடசாலை நாட்களிலிலேயே தொடங்கிய அவரது கலையார்வம் தீவிர அரசியலில் பிரவேசித்த பின்னரும் தொடர்ந்தது. பல நாவல்களையும் கவிதைகளையும் மேடை நாடகங்களையும் அவர் எழுதியுள்ளார். அவற்றுற் சில பாடநூல்களாகவும் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்தும் உள்ளார். மேடை நாடகங்களிலும் சினிமாவிலும்கூட அவர் நடித்துள்ளார். இன்று அரசாங்கத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித்தருவதோடு பொது மக்களுக்கும் நன்மை பயக்கும் பல திட்டங்கள் அவரது மூளையில் உருவானவையேயாகும். மக்கள் வங்கி, சத்தேச, சலுசலா, பெற்றோலியக் கூட்டுத்தபனம், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஊழியர் சேமலாப நிதி என அவரது பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் முதன் முதலாக சிங்கள மொழியில் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரித்து வாசித்த பெருமையும் அவருக்குண்டு.
இலங்கரட்னவின் அரசியல் வாழ்க்கையின் வெற்றிக்கு அவரது மனைவி தமரா குமாரியின் பங்கு அளப்பரியது. 1934 முதல் ஒரு அரச ஊழியராக பயணத்தை ஆரம்பித்த இலங்கரட்ன ஒரு தொழிற்சங்கவாதியாக மட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, இலக்கியவாதியாக சமுதாயத்துடன் தன்னை இறுக்கமாகப் பிணைத்துக்கொண்ட மக்கள் நண்பராகவும் எவ்வித தீய சலனங்களுக்கும் பலியாகாத பன்முக ஆளுமை கொண்ட மனிதராகவும், வாழ்ந்து, 1992ஆம் ஆண்டு, 79வது வயதில் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டார்.

இவரைப்பற்றி எழுதத் தூண்டியமைக்கு இன்னொரு காரணம், இவர் அமைச்சராக இருந்தபோது கம்பளையில் இல்லவத்துரை என்ற எமது கிராமத்தில் ஒரு சாதாரண வீட்டில் குடியிருந்து தமது அன்றாட அரசியல் பணிகளோடு மக்களோடு மக்களாகக் கலந்து அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்து எவ்வித படாடோபமும் இல்லாத மாமனிதராக வாழ்ந்தமையாகும். நாம் எமது மாணவ பருவத்தில் மிக நெருக்கமாகப் பழகிய முதல் அரசியல்வாதியாகவும் இவர் இருந்தார்.  


No comments:

Post a Comment